டெல்டா மாவட்டங்களில் இரு தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. ஏற்கனவே அறுவடை நேரத்தில் மழை பெய்து விவசாயிகளை துயரத்தில் ஆழ்த்திய நிலையில் தற்போது கொள்முதல் நேரத்திலும் மழை பெய்ய தொடங்கியிருப்பது விவசாயிகளை கவலை அடைய செய்துள்ளது.
நாகை மாவட்டம் வலிவலம், திருக்குவளை,வாழக்கரை,ஈசனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று மழை பெய்ததால் அங்குள்ள கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை தார்ப்பாய் கொண்டு மூடும் பணியில் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். அது தவிர ஏற்கனவே
கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை தைத்து அவற்றை பாதுகாப்பாக அடுக்கும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது .நாகை மாவட்டத்தில் 172 நேரடி அரசு கொள்முதல் நிலையங்களில் சுமார் 75க்கும் மேற்பட்ட திறந்தவெளி நேரடி கொள்முதல் நிலையங்களாக செயல்படுவதாகவும் அதை நிரந்தர கட்டிடமாக கட்டி தர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுபோல இன்று காலை தஞ்சை நகரிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், குடந்தை நகரிலும் மழை பெய்தது. திருவாரூரில் பரவலாக மழை பெய்தது. மேலும் மயிலாடுதுறையில் மேக மூட்டமாக இருந்தது ஆனால் மழை பெய்யவில்லை.