மக்கள் தொகை கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்ட தென் மாநிலங்கள், தொகுதி மறுவரையறை மூலம் பிரதிநிதித்துவ பாதிப்பை சந்திக்கும் என தமிழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து மார்ச் 22-ம் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்குமாறு 7 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில் தொகுதி மறுவரையறை குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது: தொகுதி மறுவரையறை நடவடிக்கைகள் திட்டமிட்டபடி தொடங்க வேண்டும். இதில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு ஏதாவது எதிர்ப்பு இருந்தால், அவர் தாராளமாக இந்த பிரச்சினையை எழுப்பலாம். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவர்களுக்கு விளக்கம் அளிப்பர். இதில் நீதித்துறை இறுதி முடிவை எடுக்கும்.
தொகுதி மறுவரையறை நடவடிக்கை மூலம் ஒவ்வொரு மாநிலத்திலும் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா போன்ற தென்மாநிலங்களிலும் அதிகரிக்கும். தொகுதி மறுவரையறையால் வடமாநிலங்கள் மட்டுமே பயன் அடையும் என கூறுவது நியாயம் அல்ல.
இவ்வாறு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.