Skip to content

டில்லி, ஈரோடு கிழக்கில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

டில்லி சட்டப்பேரவை தேர்தலில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் வாக்களித்தனர்.

டில்லி  சட்டப்பேரவையில்  ஆயுள் காலம் பிப்ரவரி 15ம் தேதியுடன் முடிவடைவதால் அங்கு  இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 70 தொகுதிகளைக்கொண்ட டில்லியில்  ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக என டெல்லியில் மும்முனை போட்டி நிலவுகிறது. 1.56 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க 13,766 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

டி ல்லி சட்டமன்றத் தேர்தலில் 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சி 70 தொகுதிகளிலும் தங்களது வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. பாஜக 68 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகளான ஜேடியு, எல்ஜேபி தலா ஒரு தொகுதியில் போட்டியிடுகிறது.

டில்லியில்   வாக்குப்பதிவு  இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் காலை முதல் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். ஒரே கட்டமாக நடைபெறும் இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடையும் நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு மத்திய துணை ராணுவப் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி தற்போது வாக்களித்துள்ளார். நிர்மான் பவனில் உள்ள வாக்குச்சாவடியி அவர் ஜனநாயக கடமையாற்றினார்.
மேலும், டெல்லி சட்டமன்றத் தேர்தலில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு ஜனாதிபதி தோட்டத்தில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் கேந்திரிய வித்யாலயாவில் வாக்களித்தார். ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ஆம் ஆத்மி தலைவரும் டில்லி முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா,  டில்லி  பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, டில்லி காவல் துறை ஆணையர் சஞ்சய் அரோரா, டில்லி தலைமைத் தேர்தல் அதிகாரி ஆர். ஆலிஸ் வாஸ், டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா, அவரது மனைவி சங்கீதா சக்சேனா ஆகியோரும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். காலை  9 மணிக்கு 8.10 சதவீதமும்,  11 மணிக்கு  19.95 சதவீதமும்  வாக்குகள் பதிவானது.
 ஈரோடு கிழக்குத் தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடந்து வருகிறது. காங்கிரஸ் தலைவர்களில் ஒருவான் ஈவிகேஎஸ் இளங்கோவன்  மறைவையொட்டி இங்கு இடைத்தேர்தல் நடக்கிறது.  இங்கு திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாதக வேட்பாளர்  சீதாலட்சுமி உள்பட  46 பேர் களத்தில் உள்ளனர்.   காலையிலேயே  விறுவிறுப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது.  திமுக வேட்பாளர்  சந்திரகுமார், குடும்பத்துடன் சென்று
 வாக்களித்தார்.  ஈரோடு கிழக்கில்  237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.  காலை 9 மணிக்கு  10.85 சதவீதமும்,  11 மணிக்கு 26.03 சதவீதமும் வாக்குகள் பதிவானது.
error: Content is protected !!