கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள தெலுங்ப்பட்டியை சேர்ந்தவர் பாலு. இவருடைய தந்தை முத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் பாலு தன்னுடைய சொத்துக்களை பாகப் பிரிவினை செய்து கொள்வதற்கு வாரிசு சான்றிதழ் தேவைப்பட்டால் அதற்கு தந்தையின் இறப்புச் சான்றிதழ் பெறுவதற்காக 2013-ம் ஆண்டு குளித்தலை தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
அப்போது தாலுகா அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த பதிவறை எழுத்தர் சந்திரசேகர் ( 53) வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.500 லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாலு திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் மறைந்து நின்று சந்திரசேகரிடம் பாலு பணம் கொடுக்கும் போது அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலிங்கம் தீர்ப்பு வழங்கினார். அதில் லஞ்சம் பெற்றதற்காக சந்திரசேகருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அரசு பதவியை தவறாக பயன்படுத்தியதற்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.