Skip to content

புயல் இல்ல.. ஆனா புயல் மாதிரி… ஆட்டம் காட்டும் பெங்கல் ..

வங்கக் கடலில் நீடித்துக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அங்கும் இங்கும் நகர்ந்து, குறிப்பாக வேதாரண்யத்துக்கு கிழக்கே 310 கிமீ தொலைவில் நேற்று முன்தினம் நிலை கொண்டு இருந்தது. அதற்கு பிறகு 340 கிமீ தொலைவுக்கு விலகிப் போனது. அதன் பிறகு 390 கிமீ தொலைவுக்கும் இன்னும் தள்ளிப் போனது.

இதன்படி, நேற்று காலை 9 மணி அளவில் வேதாரண்யத்துக்கு 390 கிமீ தொலைவில் நிலை கொண்டு காலை 9 மணி முதல் 11 மணிக்கு இடைப்பட்ட காலத்தில் தீவிரமடைந்தது. இந்நிலையில், வட பகுதியில் இருந்து வரும் குளிர் அலைகள் காரணமாக தமிழக கடலோரப் பகுதிக்கு நெருங்கி வருவதில் தாமதம் ஏற்பட்டது. காற்றின் திசை வேகம் காரணமாக அது மீண்டும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே நகர தொடங்கியது. குறிப்பாக மணிக்கு 3 கிமீ வேகத்தில் பயணிக்க தொடங்கியது. இது நேற்று மதிய நிலவரப்படி இலங்கை- திரிகோண மலைக்கு கிழக்கு- வட கிழக்கே 110 கிமீ தொலைவிலும், நாகப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 310 கிமீ தொலைவிலும், புதுச்சேரிக்கு தென் கிழக்கே 410 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தெற்கு- தென்கிழக்கே 480 கிமீ தொலைவிலும்நிலை கொண்டு இருந்தது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது: பொதுவாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைவதற்கு வளி மண்டலத்தின் கீழ் பகுதியில் காற்று குவிதல், மேல் பகுதியில் காற்று விரிவடைதல் போன்ற பல்வேறு நிகழ்வின் காரணமாக புயலாக மாறுவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக 26 மற்றும் 27ம் தேதிகளில் நல்ல காற்றின் பகுதி வளி மண்டல கீழ்ப்பகுதியில் காற்று குவிவதற்கான சூழ்நிலை இருந்தது. ஆனால் நேற்று முன்தினம் (27ம் தேதி) முதல் காற்று குவிதல் என்பது குறைந்துள்ளது. 28ம் தேதி (நேற்று) வளி மண்டல மேலடுக்கில் காற்று விரிவடைவது தொடர்ந்து நிகழ்ந்தது. அதனால் காற்றின் திசை மாறுதல் மற்றும் காற்றின் வேகம் மாறக்கூடிய பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மையப் பகுதியில் சாதகமாக இருக்கிறது. அதனால் நிலப் பகுதியை ஒட்டி அதிகமாக இருப்பதால், மேகக் கூட்டங்கள் உருவாவது குறைந்துள்ளது.

மேலும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வு 27ம் தேதியில் 13 கிமீ வேகத்தில் இருந்தது. புயல் நகரும் போது இதுபோல வேகம் குறைந்ததால் 27ம் தேதியில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கிழக்கில் இருந்து மேற்காக நகர்ந்து செல்லும் வெப்ப அலையுடனும், மேற்கில் இருந்து கிழக்காக வீசும் காற்று மற்றும் இலங்கைக்கு அருகில் இருக்கும் போது ஆழ்ந்த காற்றழுத்ததாழ்வு மண்டலத்தை நோக்கி செல்லக்கூடிய காற்றின் போக்கு, நிலப்பகுதியுடன் உராய்வு ஏற்படுவதால் உண்டான மாற்றங்கள் ஒருபுறத்திலும், மேலும், வட திசையில் அது நகர முடியாத அளவுக்கு இரண்டு எதிரெதிர் திசையில் காற்றின் போக்கு இருந்த காரணத்தால் நகர்வின் வேகம் குறைந்து இருந்தது. இதன் காரணமாக புயலாக வலுப்பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும் அது தற்போது தற்காலிக புயலாக மாறி கரையைக் கடக்க உள்ளது இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார். கடலூர் மாவட்டத்தில் அதி கனமழை பெய்யக்கூடும் எனவும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்திற்கு இன்று (வெள்ளிக்கிழமை) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதி கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் கனமழை எச்சரிக்கை காரணமாக விழுப்புரம் மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து கலெக்டர் பழனி உத்தரவிட்டுள்ளார். அதேபோல, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று மற்றும் நாளை என 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!