ஐபிஎல் கிரிக்கெட்டின் லீக் ஆட்டம் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இதுவரை சென்னை சிஎஸ்கே அணி6 போட்டிகளில் ஆடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று உள்ளது. இப்படிப்பட்ட 5 தொடர் தொல்விகளை சிஎஸ்கே இதுவரை சந்தித்தது இல்லை. இந்த நிலையில் 7வது போட்டியில் இன்று சென்னை அணி , லக்னோவுடன் ஆடுகிறது. இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி லக்னோவில் நடைபெறவுள்ளது.
இந்த ஆட்டத்தில் தொடக்க வீரர்கள் ரச்சின் ரவீந்திரா, டேவன் கான்வே, ராகுல் திரிபாதி, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, தீபக் ஹூடா ஆகியோர் மிகவும் மோசமாக விளையாடி ஆட்டமிழந்தனர். விஜய் சங்கரும், ஷிவம் துபேவும் ஓரளவுக்கு நிலைத்து விளையாடி ரன்களைச் சேர்த்தனர்.
தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா, டேவன் கான்வே, ராகுல் திரிபாதி, ஷிவம் துபே ஆகியோரிடருந்து அதிரடியான இன்னிங்ஸ் இன்று வெளிப்பட்டால்தான் அந்த அணி வெற்றிப்பாதைக்குத் திரும்ப முடியும். அதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்று தெரியவில்லை.
அதேபோல் பவுலிங்கிலும் சிஎஸ்கே அணி மோசமான நிலையில் உள்ளது. சிஎஸ்கே வீரர்கள் கலீல் அகமது, அன்ஷுல் காம்போஜ், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோரிடமிருந்து சிறப்பான பந்துவீச்சு வெளிப்பட்டால் அந்த அணிக்கு வெற்றி எளிதாகும்.
சென்னை அணிக்கு இன்னும் 8 ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. இந்த 8 ஆட்டங்களில் குறைந்தது 7-ல் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பில் நுழைய முடியும். எனவே, இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணி வெற்றிக்காக கடுமையாகப் போராடும் என்று எதிர்பார்க்கலாம்.
சிஎஸ்கே அணியில் நூர் அகமது மட்டுமே இதுவரை சிறப்பாக பந்துவீசி வருகிறார். அவர் இதுவரை 12 விக்கெட்களைச் சாய்த்துள்ளார். எனவே, லக்னோவுக்கு எதிரான இந்த ஆட்டத்திலும் நூர் அகமது சிறப்பாக பந்துவீசுவார் என்று எதிர்பார்க்கலாம்.
அதேநேரத்தில் கடந்த 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற உற்சாகத்தில் லக்னோ அணி களமிறங்குகிறது. அந்த அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 4-ல் வெற்றி, 2-ல் தோல்வியைப் பெற்றுள்ளது. கடந்த ஆட்டத்தில் லக்னோ அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் பலம் வாய்ந்த குஜராத் அணியை அதன் சொந்த மைதானத்திலேயே வீழ்த்தியுள்ளது.
சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வியில் அதன் ரசிகர்கள் அந்த அணியின் ரசிகர்களாக தொடர்ந்து நீடிப்பதா என்று யோசிக்கத் தொடங்கி விட்டனர். பெரும்பலான ரசிகர்கள் சிஎஸ்கே போட்டியை பார்க்க வந்ததே தப்பு என்று பேட்டி கொடுக்கிறார்கள். தற்போது சென்னை புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இதே நிலை நீடித்தால், சிஎஸ்கேவில் உள்ள இளம் வீரர்களின் எதிர்காலமும் வீணாகிவிடும் என்று அவர்களும் யோசிக்கத் தொடங்கி விட்டனர். சிஎஸ்கே பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய வாய்ப்பு இல்லை என்றே அதன் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
டெல்லியில் நேற்று இரவு நடந்த போட்டியில் மும்பை, டெல்லி அணிகள் மோதின. இதுவரை 4 போட்டிகளில் வென்று தோல்வியே காணாத டெல்லி நேற்று மும்பையிடம் தோற்று போனது. முதலில் பேட் செய்த மும்பை 205 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய டெல்லி 19 ஓவர்களில் 193 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இத்தனைக்கு மும்பை 4 தோல்விகளை சந்தித்து ஒரு வெற்றியை மட்டுமே பெற்றிருந்த நிலையில் நேற்று மீண்டும் வெற்றியை ருசித்து உள்ளது.
அதே நிலை இன்று சென்னைக்கு ஏற்பட்டால், அந்த அணிக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. இல்லாவிட்டால் சிஎஸ்கே தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தான் நீடிக்கும். இதற்காக டோனி என்ன யுக்தி வைத்திருக்கிறார் என்பது இன்று இரவு தெரியவரும்.