கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் இருந்து தொடர்ந்து 3 முறை காங்கிரஸ் எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் விஜயதாரணி(55) வழக்கறிஞர். தற்போதும் இவர் எம்.எல்.ஏவாக இருக்கிறார். இவர் பாஜகவுக்கு செல்கிறார் என கடந்த 10 தினங்களாக செய்திகள் வெளிவந்த நிலையில் இன்று விஜயதாரணி டில்லியில் பாஜக தேசிய தலைவர் நட்டா முன்னிலையில் அந்த கட்சியில் இணைகிறார் என தகவல் பரவி உள்ளது..
விஜயதாரணிக்கு 2021 தேர்தலில் சீட் கொடுக்க கூடாது என அந்த தொகுதி மக்கள் சென்னை காங்கிரஸ் தலைமையகத்தில் போராட்டம் நடத்தினர். அதையும் மீறி இவருக்கு காங்கிரஸ் சார்பில் சீட் வழங்கப்பட்டது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, விஜயதாரணி அதிமுகவில் சேரப்போகிறார் என செய்திகள் வெளியானது. அவர் ஜெயலலி்தாவை ஒரு முறை சந்தித்து பேசிவிட்டு வந்த நிலையில், அதன் பிறகு ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டார். எனவே அவர் அதிமுகவுக்கு செல்லவில்லை.
இப்போது அவர் பாஜகவுக்கு செல்கிறார். இதன் மூலம் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் வாக்குகளை பெறலாம் என பாஜக விஜயதாரணியை தங்கள் பக்கம் இழுத்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் கொள்ளுப்பேத்தி தான் விஜயதாரணி.