சினிமா பின்னணி பாடகர் மனோவின் மகன்கள் ரபீக் மற்றும் ஜாகீர். இவர்கள் 2 பேரும் கடந்த வாரம், வீட்டின் அருகே நடந்து சென்ற சிறுவன் உள்பட 2 பேரை சரமாரியாக தாக்கி மண்டையை உடைத்தனர். மது போதையில் இந்த வெறியாட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர். இதுதொடர்பாக மனோ மகன்கள் மீது வளசரவாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்போில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோ மகன்கள் 2 பேரையும் வலைவீசி தேடி வந்தனர்.
இதற்கிடையே மனோ மகன்கள் தலைமறைவாகினர். அவர்கள் ஆந்திராவில் பதுங்கியதாக கூறப்பட்ட நிலையில், அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் அங்கு சென்றனர் எனினும் அவர்கள் சிக்கவில்லை. இந்த நிலையில் சிறுவன் உள்பட 2 பேரை தாக்கிய வழக்கில் தலைமறைவாக உள்ள மனோ மகன்கள் ரபீக் மற்றும் ஜாகீர் இருவரும் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க கோரி சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி, மனோ மகன்கள் இருவரும் 30 நாட்கள் வளசரவாக்கம் போலீசில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன் ஜாமின் வழங்கினார்.