திருச்சி மாவட்டம், லால்குடி ரவுண்டானா பகுதியில் பெரம்பலூர் கொள்ளிடம் கூட்டு குடிநீர் செல்ல குழாய் அமைக்கும் பணிகள் கடந்த மாதம் நடைபெற்று வந்தது. இப்பணிகள் முடிவடைந்த நிலையில் குடிநீர் குழாய்க்காக பறித்த குழியை முறையாக மண் நிரப்பாமல் அரைகுறையாக மூடி உள்ளனர். கடந்த மாதம் 5 ந்தேதி திருச்சியில் இருந்து லால்குடி, அரியலூர் வழியாக ஜெயங்கொண்டம் செல்லும் அரசு பேருந்து ஒன்று பயணிகள் ஏற்றி சென்று கொண்டிருந்தது. பேருந்து முழுவதும் பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் லால்குடி ரவுண்டானா பகுதியில் சென்று கொண்டிருந்த போது பெரம்பலூர் கொள்ளிடம் கூட்டு குடிநீர் செல்ல தோண்டப்பட்ட பள்ளத்தில் எதிர்பாராத விதமாக பேருந்து பக்கவாட்டு சக்கரங்கள் மண்ணில் பதிந்து பேருந்து
சாய்ந்தபடி நின்றது . இதில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக காயமின்றி பயணிகள் அனைவரும் உயிர்த் தப்பினர்.பின்னர் பயணிகள் அணைவரையும் மாற்றுப் பேருந்து மூலம் அனுப்பி்வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த லால்குடி போலீசார் மற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளார்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் சாலையை சீர் செய்தனர். மேலும் கிரேன் எந்திரத்தின் உதவியுடன் அரசு பேருந்தை மீட்டனர்.
மேலும் கடந்த ஒரு மாதமாக குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட பள்ளம் வழியாக வாகனங்கள் செல்லாமல் மாற்றுப் பாதையில் இயங்கி வந்தது. இந்நிலையில் இன்று அரசுப் பேருந்து ஒன்று குழி தோண்டப்பட்ட பகுதி வழியாக சென்ற போது மீண்டும் அதே பள்ளத்தில் பேருந்து சிக்கிக் கொண்டது. இதனை தொடர்ந்து கிரேன் மூலம் பொதுமக்கள் உதவியுடன் போலீசார் பள்ளத்தில் சிக்கிய பேருந்தை மீட்டனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.