திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் இயங்கி வரும் அரசு மணல் கிடங்கில் மணல் அள்ளும் நேரத்தை மாற்றியமைக்க வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி தாளக்குடி ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் கிடங்கு செயல்பட்டு வருகிறது. இந்த மணல் கிடங்கிலிருந்து லால்குடி, திருவெறும்பூர், திருச்சி கிழக்கு உள்ளிட்ட தாலுகா பகுதியில் இருந்து மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக மணல் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த குவாரியில் காலை 7 மணி முதல் 10 மணி வரை டோக்கன் கொடுத்து மணல் எடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று முதல் பள்ளிகள் திறந்ததால் அதை காரணம் காட்டி டோக்கன் கொடுக்கும் நேரத்தை 10 மணிக்கு மேல் மாற்றி அமைத்தனர்.
இதனை ஏற்க மறுத்து மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் 10 மணிக்கு மேல் டோக்கன் கொடுத்தால் தொழிலாளர்கள் ஒத்துழைத்தாலும் மாடுகள் ஒத்துழைப்பதில்லை. அதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. சில்லறை வேலைக்காக மணல் எடுத்து வியாபாரம் செய்யும் எங்களால் உரிய நேரத்தில் மணலை கொண்டு செல்ல முடியவில்லை மேலும் இந்த அரசு அரசு மணல் கிடங்கிலிருந்து மணல் எடுத்துச் செல்ல மாட்டு வண்டிகளால் எந்த பிரச்சனையும் இல்லை.
ஏனென்றால் லால்குடி பகுதிக்கு செல்லும் அனைத்து மாட்டு வண்டிகளும் ஆற்றின் கரையிலே செல்வதால் போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதேபோல் திருவெரும்பூர் திருச்சி கிழக்கு பகுதியிலிருந்து வரும் மாட்டு வண்டிகள் குறைந்த அளவே செல்வதால் போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
எங்களுக்கு பழைய முறைப்படி ஏழு மணிக்கு டோக்கன் கொடுத்து மணல் அள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் அதிகாலை 5 மணிக்கு மணல் கிடங்கை திறந்தால் கூட தொழிலாளர்கள் மணல் எடுத்துச் செல்ல தயாராக உள்ளோம் எனக் கூறினார். சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகள் யாரும் வராதால் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது சம்பவ இடத்தில் கொள்ளிடம் போலீசார் மணல் மாட்டு வண்டி தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து மணல் மாட்டுவண்டி சங்கத்தின் மாவட்ட செயலாளர் கூறியதாவது
பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு எங்களின் வாழ்வாதாரத்திற்காக இந்த அரசு மணல் கிடங்கை திறந்துள்ளனர். பள்ளி நேரத்தில் மணல் எடுத்துச் செல்வதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என அதிகாரிகள் கூறினார்கள்.எங்களுடைய குழந்தைகளும் பள்ளியில் படிக்கிறது. அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் அரசு விதித்த நிபந்தனைகள் அனைத்தையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் நாங்கள் ஒத்துழைத்தாலும் மாடுகள் ஒத்துழைப்பதில்லை. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. 10 மணிக்கு மேல் டோக்கன் கொடுத்தால் மணல் எடுத்துச் செல்ல மிகுந்த நேரம் ஆகிறது. அரசு விதிக்கும் அனைத்து நிபந்தனைகளையும் நாங்கள் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறோம். எங்களுக்கு பழைய முறைப்படி காலை ஏழு மணிக்கு டோக்கன் கொடுத்து மணல் அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். . அரசு எங்களது கோரிக்கையை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.