Skip to content

தனியார் பேருந்து, இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல்…. கல்லூரி மாணவர் பலி…

  • by Authour

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே ஆவுடையார்பாறை பகுதியைச் சேர்ந்தவர் கணேசன்(45).இவரது மகன் நந்தகுமார் (22). இவர் நாமக்கல் சேலம் செல்லும் சாலையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று கல்லூரி விடுமுறை என்பதால் மாலை சுமார் 6 மணிக்கு மேல் அவருக்கு சொந்தமான ஸ்கூட்டரில் ஆவுடையார் பாறையில் இருந்து புறப்பட்டு ஈரோடு -கரூர் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது நொய்யல் குறுக்குச்சாலை இந்திய அரசுக்கு சொந்தமான வங்கி அருகே சென்று கொண்டிருந்தபோது கரூரில் இருந்து ஈரோடு நோக்கி அதி வேகமாக வந்த தனியார் பேருந்தும் ஸ்கூட்டரும் நேருக்கு நேர் மோதியது.

இதில் நந்தகுமார் ஓட்டிச் சென்ற ஸ்கூட்டர் சுமார் 200 மீட்டர் தொலைவிற்கு பேருந்தால் இழுந்து செல்லப்பட்டது .இதில் பேருந்தின் முன் பகுதி சிதைந்து போனது. ஸ்கூட்டர் சுக்கு நூறானது. விபத்து ஏற்பட்டதில் நந்தகுமாருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து ஆம்புலன்ஸ் வர வழைத்து அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .அங்கு நந்தகுமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் நந்தகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நந்தகுமாரின் தந்தை கணேசன் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கருணாநிதி, பேருந்தை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியதாக பேருந்து ஓட்டுனர் ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு சென்னிமலை தெருவைச் சேர்ந்த மகேஷ்குமார் (36) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து தனியார் பேருந்தை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

இருசக்கர வாகனமும் தனியார் பேருந்தும் மோதிய சிசிடிவி காட்சி வெளியாகி தற்போது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!