தேனி மாவட்டம், குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகள் மகேஸ்வரி (25). இவர் நாகமலைபுதுக்கோட்டை அருகே உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.எட். 2-ம் ஆண்டு படித்து வந்தார். மகேசுவரி அங்குள்ள விடுதியில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் இரவு விடுதியின் மேல்தளத்தில் மகேசுவரி பேசிக்கொண்டுள்ளார். இரவு 11.30 மணியளவில் திடீரென மரக்கிளைகள் ஒடிந்து விழுவது போன்ற சத்தம் கேட்டது. அலறி துடிப்பது போன்ற சத்தமும் கேட்டதால், அங்கிருந்த மற்ற மாணவிகள் ஓடிவந்து பார்த்தனர். தரையில் ரத்த வெள்ளத்தில் மகேஸ்வரி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் உடனடியாக இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் மகேசுவரியை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை பெற்ற மகேஸ்வரி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவி விடுதியின் மேல் தளத்தில் இருந்து தவறி விழுந்ததால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.