நாகை மாவட்டம் வண்டலூரில் 400,க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள தெரு குழாய்களில் கடந்த ஒரு மாத காலமாக சரிவர குடிநீர் வராததால், அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் குடிதண்ணீருக்காக, ஊராட்சி மன்ற தலைவரிடம், புகார் அளித்தும் எந்தவித
நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பாதிப்புக்கு ஆளான வண்டலூர் கிராம மக்கள், இன்று காலி குடங்களுடன் திடீரென நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். தலையில் காலிகுடங்களுடன் வண்டலூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
குடிப்பதற்கும், சமைப்பதற்கும் தண்ணீர் இன்றி கஷ்டப்படுவதாக வேதனை தெரிவித்த வண்டலூர் கிராம மக்கள், கடமைக்காக போட்ட தெருக்குழாயில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் கிராமத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க பிரசிடெண்ட் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குறை கூறியுள்ள கிராம மக்கள், தண்ணீர் இன்றி தவிக்கும் வண்டலூர் கிராம மக்களுக்கு முறையாக கொள்ளிடம் கூட்டு குடிநீரை கொண்டு வர வேண்டுமென அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.