Skip to content

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் விற்க நடவடிக்கை… அமைச்சர் டிஆர்பி.ராஜா தகவல்

தஞ்சாவூர் அருகே ஈச்சங்கோட்டையில் நேற்று கோத்ரெஜ் குழுமம் பாமாயில் எண்ணெய் பனை விவசாயிகளுக்கான தீர்வு மையம் தொடங்கப்பட்டது. இந்த தீர்வு மையத்தில், விவசாயிகளுக்கு தேவையான பாமாயில் எண்ணெய் பனை செடிகள், அதற்கான உரங்கள் எண்ணெய் பனை விதையை கொள்முதல் செய்யவும் இந்த மையம் தஞ்சாவூர் மாவட்டத்தில் முதன் முதலில் திறக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் டிஆர்பி.ராஜா கலந்து கொண்டு தொடங்கி வைத்து பேசியதாவது: மாற்றுப் பயிராக எண்ணெய் பனை சாகுபடி செய்ய விவசாயிகள் தமிழக தோட்டக்கலைத்துறை மூலம் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. 22 சதவீதம் பாமாயில் உற்பத்தி செய்து வருகிறோம். பாமாயில் எண்ணெய்க்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது.

இந்த பாமாயில் உற்பத்தியை விவசாயிகள் அதிக அளவில் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக இங்கு பாமாயில் எண்ணெய் பனை தீர்வு மையம் திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் கடன் கேட்பதை கைவிட்டு, அடுத்தவர்களுக்கு கடன் கொடுக்கும் வகையில் முன்னேற வேண்டும். டெல்டா மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், தாங்கள் விளைவித்த விளைப்பொருட்களை மதிப்பு கூட்டி விற்கும் தொழில் முனைவோராக மாற வேண்டும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தேங்காய் விலை வீழ்ச்சியிலிருந்து விடுபட்டு, விவசாயிகள் பயன்பெறும் வகையில் மதிப்பு கூட்டப்பட்ட தேங்காய் எண்ணெயை ரேஷன் கடைகளில் விற்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெயும், அதே போல் நிலக்கடலை மூலம் மதிப்பு கூட்டப்பட்ட கடலை எண்ணெயும் ரேஷன் கடைகளில் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விழாவில் தஞ்சாவூர் எம்.பி., முரசொலி, கோத்ரெஜ் அக்ரோவெட் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் சவுதா நியோகி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!