தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியது. காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்கும் விவகாரம் குறித்து மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா, கோவி. செழியன், துரை. சந்திரசேகான்(திமுக), எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் கம்யூனிஸ்ட், பாமக, தவாகா, காங்கிரஸ் உறுப்பினர்கள் இதில் கையெழுத்திட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து இந்த தீர்மானத்தை கொண்டு வந்த திமுக சார்பில் டிஆர்பி ராஜா பேசினார். அதைத்தொடர்ந்துமற்ற எம்.எல்ஏக்களும் பேசினார்கள். ராஜா பேசும்போது டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் ஏலம் நடத்துவது உள்நாட்டு மக்களை மதிக்காமல் நடத்துவது போன்றது என்றார்.
அடுத்ததாக நன்னிலம் காமராஜ்(அதிமுக) பேசினார். அவர் பேசும்போது நிலக்கரி சுரங்கத்தை தடுக்க முதல்வர் ஸ்டாலின் பிரதமரிடம் போனில் பேசி இருக்கலாம், டெண்டரை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.அதன்பிறகு, காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை, பாமக ஜி.கே. மணி பேசினார். அனைத்து உறுப்பினர்களும் பேசிய பின்னர் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார். அப்போது முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின் எழுந்து விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:
டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் என்ற செய்தியை அறிந்ததும் உங்களைப்போல நானும் அதிர்ச்சி அடைந்தேன். நிலக்கரி சுரங்கம் தொடர்பாக பிரதமருக்கு நான் எழுதிய கடிதத்தின் நகல் திமுக எம்.பிக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நாடாளுமன்றத்திலும் திமுக எம்.பிக்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த பேச இருக்கிறார்கள்.
சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் இது குறித்து தெரிவிக்கும்படி டிஆர் பாலுவிடம் சொன்னேன். அமைச்சர் வெளியூர் சென்று விட்டதால் அவரை சந்திக்கவில்லை. அதே நேரத்தில் அவருடன் பாலு தொலைபேசியில் பேசி நம்முடைய நிலைய தெளிவுபடுத்தி உள்ளார்.
எந்தகாரணத்தைக்கொண்டும் நிலக்கரி சுரங்கம் இங்கு வராது. அதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது. நானும் டெல்டாக்காரன் தான். எனவே நிச்சயம் இந்த திட்டத்தை அனுமதிக்க மாட்டோம். அனுமதிக்க மாட்டோம்.
இவ்வாறு அவர் பேசினார்.