Skip to content
Home » கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.36 இலட்சம்… அரியலூர் கலெக்டர் தகவல்…

கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.36 இலட்சம்… அரியலூர் கலெக்டர் தகவல்…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2024 சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 89 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் இரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்கி பேருதவி புரிந்து வருகிறது.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது தமிழக அரசு வழங்கும் 30 சதவீதம் சிறப்புத்தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இந்த சிறப்புத்தள்ளுபடி விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், சேலம், ஆரணி, திருபுவனம் போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுப்புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், கூறைநாடு புடவைகள் மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், லினன் புடவைகள் போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேஷ்டி, லுங்கி, துண்டு இரகங்கள், பருத்தி சட்டைகள்; திரைச்சீலைகள், மிதியடிகள், நைட்டிஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி இரகங்கள் ஏராளமாகத் தருவிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் இன்றயை தினம் ஜெயங்கொண்டம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2024 சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, புதிய ரக பட்டுப்புடவைகளை பார்வையிட்டார். மேலும், முதல் விற்பனையினை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.

மேலும், ஜெயங்கொண்டம் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2023-ல் ரூ.30.10 இலட்சம் விற்பனை செய்யப்பட்டது. தற்போது தீபாவளி 2024-க்கு ரூ.36.00 இலட்சம் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

மேலும், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், “கோ-ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்பு திட்டம்” என்ற சேமிப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இதன்படி 11 மாத சந்தா தொகை வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்டு, 12 வது மாத சந்தா

தொகையை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி, மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 30 சதவீதம் அரசு தள்ளுபடியுடன் துணிகள் வழங்கப்பட்டு வருகிறது. கோ-ஆப்டெக்ஸில் மின் வணிக விற்பனை நடைபெற்று வருகிறது. வாடிக்கையாளர்கள் www.cooptex.gov.in என்ற இணையதளத்தில் தங்களது விருப்பத்திற்கேற்ப இரகங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

இந்நிகழ்ச்சியில், கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் ஜெ.நாகராஜன், மேலாளர், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி (கூடுதல் பொறுப்பு) அய்யப்பன், ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் சம்பத்குமார், அரசு அலுவலர்கள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!