இந்தியா முழுவதும் அடுத்த வருடம் தொகுதிகள் மறு சீரமைப்பு நடைபெற உள்ளது. அப்படி தொகுதிகள் சீரமைப்பு நடக்கும்போது வட மாநிலங்களில் அதிக அளவில் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது. தென் மாநிலங்களுக்கு அந்த அளவு தொகுதி எண்ணிக்கை உயர வாய்ப்பு இல்லை.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை உயர்த்தினால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். இதை தடுத்து நிறுத்தி, வட மாநிலங்களுக்கு உயர்த்தும் அதே விகிதத்தில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கும் தொகுதி எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தென் மாநில தலைவர்கள் மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார்கள்.
இது குறித்து ஆலோசிக்க சென்னையில் நாளை முதல்வர் ஸ்டாலின் தென் மாநில முதல்வர்கள், தலைவர்கள் கூட்டத்தை கூட்டி உள்ளார். அதன்படி நாளை சென்னையில் இந்த கூட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்கும்படி 7 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஒவ்வொரு மாநிலங்களுக்கும் ஒரு அமைச்சரும், ஒரு எம்.பியும் நேரில் சென்று கொடுத்தனர்.
அதன்படி நாளை காலை சென்னையில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்க கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்றே சென்னை வந்து விட்டார். அவரை தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் வரவேற்றனர்.
இந்த நிலையில் கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனைக்கூட்டத்திற்கு வரும் தலைவர்களை வரவேற்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார். இதில் கூட்டு நடவடிக்கை குழு முதல் ஆலோசனை கூட்டத்திற்கு வரும் தலைவர்களை மனதார வரவேற்கிறேன் என கூறி உள்ளார்.
இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின்படி அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்றும் முதல்வர் கூறி உள்ளார்.