2026 ம் ஆண்டுக்குப் பின் மேற்கொள்ளப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதுகுறித்து மேற்கொள்ளவேண்டிய அணுகுமுறை குறித்தும் முடிவுகள் மேற்கொள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 5-3-2025 அன்று சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றினை கூட்டினார். அக்கூட்டத்தில் இப்பிரச்சினை தொடர்பாக முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குறிப்பாக, இப்பிரச்சினையினால் பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களிலுள்ள கட்சிகளின் முக்கியப் பிரதிநிதிகளைக் கொண்டு “கூட்டு நடவடிக்கைக் குழு” அமைத்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்களையும், அவை சார்ந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும், மக்கள் மத்தியில் இப்பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், அதற்கான முறையான அழைப்பை மேற்படி கட்சித் தலைவர்களுக்கு அனுப்பி வைத்திடவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் , 7 மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களுக்கும், முன்னாள் முதலமைச்சர்களுக்கும், அம்மாநிலங்களில் உள்ள பல்வேறு முக்கிய கட்சிகளின் தலைவர்களுக்கும் இன்று (7.3.2025) கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம் வருமாறு:
இந்திய மக்களாட்சி முறையின் சாராம்சம் அதன் கூட்டாட்சித் தன்மையில்தான் அமைந்துள்ளது என்றும்; ஒரே நாடாக நமது மதிப்புறு ஒற்றுமையைப் போற்றும் அதேவேளையில், ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் உரிமைக் குரலை எழுப்ப உதவிடும் ஒரு அமைப்பாகவும் மக்களாட்சி முறை உள்ளது என்றும்; நம் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் நம்மைப்போன்ற மாநில அரசுகளின் உரிமையை நிரந்தரமாகக் குறைக்கக்கூடிய அச்சுறுத்தலை தற்போது நாம் எதிர்கொண்டுள்ள நிலையில், இன்று நான்
அதுகுறித்து முக்கியமாக தங்களுக்கு கடிதம் எழுதுவதாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டு தமது கடிதத்தில் மேலும் விவரித்துள்ளார்.
இந்தியாவில் 1952, 1963 மற்றும் 1973-ம் ஆண்டுகளில் நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டது. எனினும், 1976ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அரசமைப்புச் சட்டம் 42-வது திருத்தத்தின்படி, மக்கள்தொகை கட்டுப்பாட்டை ஊக்குவிப்பதற்காக 2000ம் ஆண்டுக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பு வரை தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது.
மக்கள்தொகை ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்து நீடித்ததால், 84வது அரசியலமைப்பு திருத்தம் வாயிலாக 2026 க்குப் பிறகு மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு வரை இது நீட்டிக்கப்பட்டது.
2021 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தாமதமானதால், தொகுதி மறுவரையறை முதலில் 2031 மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு எதிர்பார்க்கப்பட்டது எதிர்பார்த்ததைவிட முன்னதாகவே நடைபெறக்கூடும் எனத் தற்போது தெரியவருவதாகவும், அதனால் மாநில நலன்களைப் பாதுகாக்க மிகக் குறைந்த கால அவகாசமே உள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தொகுதி மறுவரையறை நடக்குமா என்பதல்ல கேள்வி, ஆனால் அந்த மறுவரையறை எப்போது நடக்கும், அப்படி நடக்கும்போது, இந்திய நாட்டின் முன்னுரிமைத் திட்டங்களுக்குச் சிறந்த பங்களிப்பை வழங்கிய மாநிலங்களின் செயலுக்கு மதிப்பளிக்கப்படுமா என்பதுதான் கேள்வி.
2026ம் ஆண்டுக்குப் பிறகு, அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், தற்போதுள்ள நிலை பாதிப்புக்குள்ளாகும் என்றும், தங்கள் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி, சிறந்த நிர்வாகக் குறியீடுகளை அடைந்த மாநிலங்கள் நாட்டின் கொள்கைகளை வரையறுக்கும் நாடாளுமன்றத்தில் குறைக்கப்பட்ட பிரதிநிதித்துவத்தை எதிர்கொண்டு, நியாயமற்ற ஒரு தண்டனையைப் பெற நேரிடும் என்றும் தமது கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு அது செயல்படுத்தப்பட்டுவிட்டால், அதனால் ஏற்படும் ஜனநாயக ஏற்றத்தாழ்வு பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்றும், இது நமது மாநில மக்களின் நலன்களுக்காக நாடாளுமன்றத்தில் வாதிடுவதற்கும், மாநிலத்திற்குரிய முக்கிய வளங்களைப் பாதுகாப்பதற்கும், தேசிய அளவில் மேற்கொள்ளப்படும் முக்கியமான முடிவுகளில் நமது குரலை ஒலிக்கச் செய்வதற்குமுள்ள திறனைக் குறைத்துவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் தொகுதி மறுவரையறைக்கு எதிரானவர்கள் அல்ல என்றும்; தங்கள் தேசியக் கடமைகளை நிறைவேற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக இந்த தொகுதி மறுவரையறை
உறுதிப்பாட்டுடன், ஒரு கூட்டு நடவடிக்கைக் குழுவை அமைத்து, இந்தியா முழுவதும் இதே அச்சுறுத்தலை எதிர்கொள்ளக்கூடிய அனைத்து மாநிலங்களையும் அணுக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும், தமது கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பிரச்சினை தனிப்பட்ட மாநிலத்தின் பிரச்சினைக்கு அப்பாற்பட்டது என்று தாம் நம்புவதாகவும், கூட்டாட்சி கொள்கை என்ற நம்முடைய அடிப்படையான தத்துவத்தைப் பாதிப்படையச் செய்துவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சூழலில், இப்பிரச்சினையின் அரசமைப்புரீதியான, சட்ட மற்றும் அரசியல்ரீதியான பரிமாணங்களை நாம் ஒன்றாக இணைத்து ஆராயவேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் நமது தற்போதைய பிரதிநிதித்துவத்தை சதவீத அடிப்படையில் பாதுகாத்திடும் வகையில் அதற்கான தீர்வுகளை நாம் இணைந்து உருவாக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்…
முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேற்குவங்க முதலமைச்சர் செல்வி மமதா பானர்ஜி, தெலங்கானா முதலமைச்சர் . ரேவந்த் ரெட்டி, தெலங்கான முன்னாள் முதலமைச்சர் . சந்திரசேகர ராவ், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடக முதலமைச்சர் . சித்தராமையா, கர்நாடகா துணை முதலமைச்சர் . சிவகுமார், பஞ்சாப் முதலமைச்சர் பகவத்மான், ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஆந்திரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இக்கடிதம் மேலும், மேற்குறிப்பிட்ட 7 மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு முக்கியக் கட்சித் தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.