திமுகவை உருவாக்கிய முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் திமுகவினர் பேரணியாக சென்று மரியாதை செய்வது வழக்கம்.
அதன்படி இன்று காலை சென்னை வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகிலிருந்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதி பேரணியாக புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடைந்தனர்.
அங்கு அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், துணை முதல்வர் உதயநிதி, டிஆர் பாலு, அமைச்சர்கள் கே. என். நேரு, செந்தில் பாலாஜி, அன்பில் மகேஸ், உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், கனிமொழி எம், பி, சென்னை மேயர் பிரியா மற்றும் மாவட்ட திமுக செயலாளர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள், திமுக தலைமைகழக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
முதலில் முதல்வர் ஸ்டாலின் மலர்வளையம் வைத்தார். அதைத்தொடர்ந்து மற்றவர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர். பின்னர் அருகில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்திலும் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் மரியாதை செலுத்தினர்.