Skip to content
Home » திமுக பவள விழா…..17ம் தேதி கொண்டாட்டம்…. முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

திமுக பவள விழா…..17ம் தேதி கொண்டாட்டம்…. முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

  • by Senthil

 

திமுக தலைவரும்,  தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் அமெரிக்க மண்ணில் இருந்து புறப்படும் முன் எழுதும் பவளவிழா அழைப்பு மடல்.

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் அரசுமுறைப் பயணத்தில் ஏறத்தாழ இரண்டு வாரகாலமாக தொடர்ச்சியான பணிகளில் இருந்தாலும், என் உள்ளம் ஒவ்வொரு நொடியும் தமிழ்நாட்டைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறது. உலகின் முன்னணித் தொழில் நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஒவ்வொன்றும் தமிழ்நாட்டின் தொழில் முதலீட்டினைப் பெருக்கி, இளைய தலைமுறையினருக்கான வேலைவாய்ப்பை வழங்கிட வழிவகுக்கின்றன. முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்பதை வெறும் சொற்களாக இல்லாமல், முழுமையான செயல்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது திராவிட மாடல் அரசு. அதை அமெரிக்காவில் வாழும் தமிழர்களும் நன்றாகப் புரிந்துகொண்டு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தங்களின் ஒத்துழைப்பை வழங்குவதில் ஆர்வமாக இருக்கிறார்கள்.

இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாநிலக் கட்சி, முக்கால் நூற்றாண்டு காலத்தைக் கடந்து, மக்களின் பேராதரவுடன் ஆட்சிப் பொறுப்பில் இருப்பதுடன், இந்திய அளவில் கொள்கை வலிமைமிக்க தாக்கங்களை ஏற்படுத்தக் கூடிய இயக்கமாகவும் திகழ்கிறதென்றால், அது திராவிட முன்னேற்றக் கழகம்தான்.

செப்டம்பர் 15 – இந்த மாபெரும் இயக்கத்தை உருவாக்கித் தந்து, இந்த மாநிலத்தின் உரிமைகளைக் காத்து, தமிழ்நாடு என்று நம் மாநிலத்திற்குப் பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள். செப்டம்பர் 17 – கொள்கைப் பேராசான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்தநாள். அதே நாள்தான், திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற பேரியக்கம் தொடங்கப்பட்ட நாள். இந்த மூன்றையும் இணைத்து, முப்பெரும் விழா என்று பெயர்சூட்டி திராவிடத் திருவிழாவாகக் கொண்டாடும் வழக்கத்தை உருவாக்கியவர் நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

செப்டம்பர் 17-ம் நாள் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ள பவளவிழா நிகழ்வுகள் குறித்தும், மாவட்டங்கள்தோறும் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் குறித்தும் அமெரிக்காவில் இருந்தபடியே, கழகத்தின் ஒருங்கிணைப்புக் குழுவினருடன் காணொலியில் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதுடன், மாவட்டக் கழகச் செயலாளர்கள் பலரிடமும் தொடர்ந்து பேசி வருகிறேன். ஆகஸ்ட் 16-ம் நாள் நடைபெற்ற மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, கழக மாவட்டங்கள் பலவற்றிலும் கழகத்தின் பவள விழாவிற்கான சுவர் விளம்பரங்கள் எழில்மிகுந்த முறையிலே எழுதப்பட்டிருப்பதை காணொலிகளாக நம் கழக நிர்வாகிகள் அனுப்பியிருந்தார்கள். சிறப்பான முறையிலே சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டிருப்பதைக் கண்டு மகிழ்ந்தேன்.

கழகத்தின் கடைக்கோடி உறுப்பினரின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் உட்கட்சி ஜனநாயகத்தன்மையின் அடிப்படையில் கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் பங்கேற்கும் பொது உறுப்பினர்கள் கூட்டம் தொடர்ந்து நடைபெறுவதையும் அறிந்து கொண்டேன். வட்டவாரியாக – கிளைவாரியாக நடைபெற்ற இத்தகைய பொது உறுப்பினர் கூட்டங்கள் பெரும்பாலான கழக மாவட்டங்களில் முழுமையாக நிறைவு பெற்றிருக்கின்றன.

தமிழ்நாடு முழுவதும் தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாக்களும், கழகத்தின் பவளவிழாவும் பல நிகழ்வுகளாகக் கொண்டாடப்படும் நிலையில், தி.மு.கழகம் தொடங்கப்பட்ட நாளான செப்டம்பர் 17 அன்று அதனை மிகுந்த எழுச்சியுடன் கொண்டாடும் பொறுப்பினை சென்னை தெற்கு மாவட்டத்திற்கு வழங்கியிருக்கிறது தலைமைக் கழகம். மாவட்டக் கழகச் செயலாளரும்  மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான . மா. சுப்பிரமணியன் மாரத்தான் ஓட்டம்போல ஓய்வின்றித் தொடர்ச்சியாக நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் பிரம்மாண்ட ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்.

சென்னை தெற்கு மாவட்டத்தின் சார்பில் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடத்தப்பட்ட கழக விழாக்கள் அனைத்தும் வரலாற்றுத் திருப்பங்களாக அமைந்திருக்கின்றன. கோடிக்கணக்கான உடன்பிறப்புகளைக் கண்ணீர்க் கடலில் தவிக்கவிட்டு, வங்கக் கடல் மணல்பரப்பில் தன் அண்ணன் அருகே ஓய்வெடுக்கச் சென்ற முத்தமிழறிஞர் கலைஞருக்கு அகில இந்தியத் தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தும் கூட்டம் நடைபெற்றது நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில்தான்.

நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் சென்னை தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட, உங்களில் ஒருவனான என்னுடைய 70-வது பிறந்தநாளில் வடமாநிலத் தலைவர்கள் வாழ்த்திப் பேசிய விழாவில்தான், இன்றைய ‘இந்தியா’ கூட்டணிக்கு அச்சாரமிடப்பட்டது. அது வலிமைமிகு எதிரணியாக நாடாளுமன்றத்தில் இன்று அமர்ந்து, இந்திய மக்களை பேராபத்திலிருந்து காத்து நிற்கிறது.

நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டையொட்டி மகளிரணி சார்பில், கழகத் துணைப் பொதுச்செயலாளர் அன்புத் தங்கை கனிமொழி கருணாநிதி எம்.பி., முன்னெடுப்பில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான கருத்தரங்கத்தில் அன்னை சோனியா காந்தி, திருமிகு பிரியங்கா காந்தி உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த பெண் தலைவர்கள் பங்கேற்று, தலைவர் கலைஞரின் மகளிர் நலன் காக்கும் திட்டங்களையும், மகளிர் உரிமை காப்பதில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பையும் எடுத்துரைத்தார்கள்.

இப்படி பல சிறப்புகள் கொண்ட இடத்தில்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பவள விழா பொதுக்கூட்டம் செப்டம்பர் 17-ம் நாள் எழுச்சிகரமாக நடைபெறவிருக்கிறது. இந்தியாவே திரும்பிப் பார்க்கின்ற வகையில் சிறப்பான ஏற்பாடுகளை முனைப்பாக மேற்கொண்டு வரும் சென்னை தெற்கு மாவட்டக் கழகத்துடன் மற்ற மாவட்டக் கழகத்தினரும் இணைந்து நின்று, சென்னை மாநகரத்திற்குள் வங்கக்கடல் புகுந்ததோ என எண்ணுகிற அளவுக்கு உடன்பிறப்புகளின் கறுப்பு-சிவப்புக் கடலாகப் பவளவிழாக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.

1949-ஆம் ஆண்டு வடசென்னை ராயபுரம்  ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல் பொதுக்கூட்டத்தை நடத்தினார் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள். 75 ஆண்டுகள் கழித்து, தென்சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பவள விழா நிறைவுப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த 75 ஆண்டுகாலத்தில், தெற்குதான் வடக்கிற்கு வழிகாட்டுகிறது என்கிற அளவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைத் தாக்கம் நாடு முழுவதும் பேசப்படுகிறது. திராவிட மாடல் என்பது இந்திய மாநிலங்கள் பின்பற்றும் கோட்பாடாக மாறியிருக்கிறது.

கடல் கடந்து – கண்டங்கள் தாண்டி – பல்லாயிரம் மைல்கள் தொலைவில் உள்ள அமெரிக்க ஐக்கிய நாட்டில் இருந்து இந்தக் கடிதத்தை எழுதும்போது, ஒரு மகத்தான ஜனநாயகப் பேரியக்கத்தின் தலைவர் என்ற பொறுப்பை உடன்பிறப்புகளாம் நீங்கள் ஒருமனதாக என்னை நம்பி ஒப்படைத்திருக்கிறீர்கள் என்ற பெருமித உணர்வையும், பொறுப்பின் சுமையையும் உணர்கிறேன்.

1957-ம் ஆண்டு தி.மு.கழகம் முதன்முதலாகப் பொதுத் தேர்தல் களத்தைச் சந்தித்தபோது வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் உள்ள தூதரகங்களில் தமிழ் தெரிந்த அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றும், அந்தந்த நாடுகளில் உள்ள தமிழ்த் தொழிலாளர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது. இன்றும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் உலக நாடெங்கும் வாழ்கிறார்கள். உடலுழைப்புத் தொழிலாளர்களாக மட்டுமல்ல, உயர்கல்வி கற்று, அதனால் அயல்நாடுகளில் உயர்பொறுப்புகளைப் பெற்றவர்களாக, நல்ல ஊதியம் பெறக்கூடியவர்களாகத் திகழ்கிறார்கள். பேரறிஞர் அண்ணா தொடங்கி வைத்த திராவிட இயக்கத்தின் ஆட்சியினால், முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிக்காலத் திட்டங்களால் இத்தகைய வாய்ப்புகளைப் பெற்று அயல்நாடுகளில் பணியாற்றும் அவர்களின் நலன் காக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் அயலக நலத் துறை உருவாக்கப்பட்டதும் தி.மு.கழக ஆட்சியில்தான். அயலகத் தமிழர் நல வாரியம் அமைக்கப்பட்டதும் திராவிட மாடல் ஆட்சியில்தான்.

அனைத்துத் துறைகளிலும் முன்னேறிய மாநிலமாகத் தமிழ்நாடு – அனைத்து நாடுகளிலும் வாழும் தமிழர்களின் நலன் காக்கும் வாரியம் என உலகத்தில் தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களின் நம்பிக்கைக்குரிய இயக்கமாக – அவர்களின் நண்பனாகத் தோழனாகத் திகழ்கிற இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். இதுதான் 75 ஆண்டுகாலப் பயணத்தின் சாதனை. இந்த வெற்றிப் பயணம் தொடர்ந்திட, செப்டம்பர் 17 அன்று வரலாற்றுப் பெருவிழாவான கழகத்தின் பவள விழாவில் படையெனத் திரண்டு, கொண்டாடி மகிழ்வோம்.

இது உங்களில் ஒருவனான என்னுடைய அழைப்பு மட்டுமல்ல; இந்த இயக்கத்தை உருவாக்கிய பேரறிஞர் அண்ணாவும், பேணிப் பாதுகாத்து வளர்த்த முத்தமிழறிஞர் கலைஞரும் நம்மை அழைக்கிறார்கள்! அணி திரள்வோம்! பணி தொடர்வோம்!

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!