Skip to content
Home » புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு.. அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு.. அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சிய சட்டங்களுக்கு மாற்றாக 3 புதிய சட்டங்களை மத்திய அரசு இயற்றியது. ஜூலை 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் சட்டங்களும் அமலுக்கு வர உள்ள நிலையில் அதற்கு ஆட்சேபம் தெரிவித்து தமிழக அரசு சார்பில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில்.. குறிப்பிட்ட 3 குற்றவியல் சட்டங்களும் அரசியல் சட்டத்தின் பொதுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. பொதுப் பட்டியலில் இருந்தபோதிலும் மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்காமல் அவசர கதியில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இச்சட்டங்கள் தொடர்பாக மாநில அரசுகளுடன் விரிவான ஆலோசனை நடத்தப்பட வேண்டும். கருத்து தெரிவிக்க மாநிலங்களுக்கு போதிய அவகாசம் அளிக்கப்படவில்லை.  எதிர்க்கட்சிகளின் பங்களிப்பே இல்லாமல் பார்லிமென்டில் 3 சட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றிற்கு பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாக்ரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷிய அபினியம் என சமஸ்கிருதத்தில் பெயர் வைக்கப்பட்டுள்ளன. முக்கிய சட்டங்களுக்கு சமஸ்கிருதத்தில் பெயர் சூட்டியிருப்பது அரசியல் சட்டத்தின் 348வது பிரிவை அப்பட்டமாக மீறும் செயல். பார்லிமென்டில் அனைத்து சட்டங்களும் ஆங்கிலத்தில் மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டும் என்பது அரசியல் சட்டப்படி கட்டாயம். எனவே சமஸ்கிருதத்தில் பெயர் வைத்திருப்பது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது.  3 புதிய குற்றவியல் சட்டங்களிலும் அடிப்படையில் சில தவறுகள் உள்ளன. பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 103வது பிரிவு, இரு வேறுபட்ட கொலைச் செயல்கள் பற்றி குறிப்பிட்ட போதிலும் ஒரே தண்டனையை விதிக்க வகை செய்கிறது. மற்றவற்றிலும் தெளிவற்ற குழப்பமான சட்டப்பிரிவுகளும், முரண்பட்ட விளக்கங்களும் உள்ளன. 3 புதிய சட்டங்களையும் அமல்படுத்தும் முன் கல்வி நிலையங்களுடன் விவாதிக்க வேண்டியது அவசியம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!