ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப்பணி தேர்வுகளின் முடிவு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 57 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் 50 பேர் நான் முதல்வன் திட்டத்தில் சேர்ந்து படித்தவர்கள். தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பாராட்டு விழா நடத்தப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி இன்று அவர்களுக்கு சென்னையில் பாராட்டு விழா நடந்தது.
இதில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தலைமைச்செயலாளர் முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர். தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பரிசு வழங்கி பாராட்டினார்.
விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: அனைவருக்கும் என்னுடைய பாராட்டு, வாழ்த்துகள். ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழ்நாடு கேடரா இருந்தா அவர்களுக்கு தனி மரியாதை. அவர்களுக்கென்று தனி அறிவு முகம் இருக்கிறது. அனைத்து போட்டித் தேர்வுகளிலும் வெற்றிபெறவும், கல்வித்திறனை உயர்த்தவும் நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டது. அதிகாரம் என்பது சக மனிதர்கள், ஏழைகள் வாழ்வு முன்னேற்றத்துக்கு பயன்படவேண்டும். நாளை உங்களையும் ரோல் மாடலா சொல்லும் அளவுக்கு நீங்க உயரணும்.
கல்வி தான் நமக்கு ஆயுதம். எந்த இடர் வந்தாலும் கல்வியை கைவிட்டு விடக்கூடாது. இந்தியா முழுவதும் தமிழ்நாட்டை சேர்ந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இருந்தால், தமிழகத்தின் பெருமை இன்னும் உயரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
துணை முதல்வர் உதயநிதி பேசும்போது, அடுத்த முறை தமிழகத்தில் இருந்து குறைந்தபட்சம் 100 பேராவது ஐஏஎஸ் தேர்ச்சி பெற வேண்டும் என்பதே நமது இலக்கு என்றார்.