சென்னையில் கடந்த ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடும், முதலீட்டாளர்கள் சந்திப்புகளும் நடத்தப்பட்டு, ரூ.9 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளுக்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, உயர்தர வேலைவாய்ப்பு, உயர்தர முதலீடு ஆகியவற்றை நோக்கமாக கொண்டு, முதல்வர் அமெரிக்கா செல்வதாகவும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, முதல்வர் ஸ்டாலின் நாளை (ஆக.27) இரவு சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். அங்கு 17 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கிறார். 28-ம் தேதி சான்பிரான்சிஸ்கோ செல்லும் முதல்வர், அங்கு நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார். 31-ம் தேதி நடக்கும் நிகழ்வில், புலம்பெயர்ந்த தமிழர்களுடன் கலந்துரையாடுகிறார். பல்வேறு முன்னணி நிறுவனங்களின் தலைவர்களை சந்திக்கிறார்.
செப்டம்பர் 2-ம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் இருந்து புறப்பட்டு சிகாகோ செல்கிறார். அங்கு 12-ம் தேதி வரை தங்கியிருந்து பல்வேறு முதலீட்டாளர்களை சந்திக்கிறார். ‘ஃபார்ச்சூன் 500’ பட்டியலில் உள்ள உலகின் முன்னணி நிறுவனங்களின் தலைவர்களுடன் பேசுகிறார். இதற்கிடையே, செப்.7-ம் தேதி அயலக தமிழர்கள் உடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு, முதல்வர் ஸ்டாலின் செப்டம்பர் 12-ம் தேதி சென்னை திரும்புகிறார்.