பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் விழாக்கள் நடைபெறும். அதில் சித்திரை தேர்த்திருவிழாவும் மிகவும் பிரசித்தி பெற்றது.
கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் சித்திரைத் தேர்த்திருவிழா கொடியேற்றம் தொடங்கியது. இவ்விழா வரும் 28-ந்தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.விழாவையொட்டி தினந்தோறும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
விழாவின் 7ம் நாள் மாலை 6.30 மணியளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு நெல்லளவு கண்டருளினார். அதன்பின் ஆழ்வான் திருச்சுற்று வழியாக இரவு 9 மணிக்கு தாயார் சன்னதி சென்றடைந்தார். திருமஞ்சனம் கண்டருளி அதிகாலை 1 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.
8ம் நாளான நேற்று (25-ந் தேதி) காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து காலை 9 மணிக்கு ரெங்கவிலாச மண்டபம் வந்து சேர்ந்தார். பின்னர் மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளி இரவு 9 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் இன்று (சனிக்கிழமை) காலை தொடங்கியது. . இதற்காக நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன், கண்ணாடி அறையிலிருந்து தோளுக்கினியானில் அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 5.30 மணிக்கு சித்திரை தேர் மண்டபம் வந்தடைந்தார். பின்னர் அதிகாலை 5.45 மணிக்கு நம்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகளுக்கு பின் காலை 6.30 மணிக்கு மேல் சித்திரைத் தேரோட்டம் தொடங்கியது. பல்லாயிரகணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுந்தனர். ரங்கா, ரங்கா, கோவிந்தா என்ற பக்தி முழக்கங்களுடன் வடம் பிடித்து இழுத்தனர்.
தேரோட்டத்தையொட்டி தேரோடும் வீதிகளில் ஆங்காங்கே அன்னதானம், நீர் மோர், வழங்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
நாளை சப்தா வரணம் நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான 28-ந்தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார்.