மயிலாடுதுறை நகர பூங்காவில் இயங்கி வரும் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பிடத்தில் நேற்று மாலை, பிறந்து சிறிது நேரமே ஆன பெண் குழந்தை கிடந்தது. குழந்தை அழும் சத்தம் கேட்டு கழிப்பிடத்தை நிர்வகிக்கும் ஊழியர்கள் சென்று பார்த்த போது தொப்புள் கொடியுடன் பிறந்த உயிருடன் உள்ள பெண் குழந்தையை தரையில் கிடத்தி கழிப்பிடத்தில் இருந்த பிளாஸ்டிக் பக்கெட்டால் மூடி வைத்துவிட்டு குழந்தையை பெற்றெடுத்த பெண் மாயமானது தெரியவந்தது.
உடனடியாக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் ஆட்டோவில் குழந்தையை தூக்கிக் கொண்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உள்ள பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். நவீன கட்டண கழிப்பிடத்திலேயே குழந்தையை பெற்றெடுத்து விட்டு குழந்தையை போட்டுவிட்டு சென்றாரா? இல்லை யாருக்கும் தெரியாமல் குழந்தையை மறைத்து எடுத்து வந்து கழிப்பிடத்தில் கிடத்தி விட்டு சென்றாரா என்ற கோணத்தில் மயிலாடுதுறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தையை ஏன் தாய் போட்டு விட்டு போனார் எனவும் போலீசார் விசாரிக்கிறார்கள்.