ஐ.ஐ.டி.யில் படிக்கும் மாணவ-மாணவிகள் தற்கொலை மூலம் உயிரிழக்கும் சோகம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. கடந்த மார்ச் 14-ந் தேதி ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த புஷ்பக் ஸ்ரீசாய் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்டார். அவரும் சரியாக படிக்க முடியவில்லை என்றுதான் இந்த சோக முடிவை எடுத்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று சென்னை ஐ.ஐ.டி.யில் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த இன்னொரு மாணவரும் தற்கொலை செய்து கொண்டார். மாணவர் பெயர் கேத்தார் சவுக்லே (20). இவர் ஐ.ஐ.டி.யில் 2-வது ஆண்டு பி.டெக் படித்துவந்தார். அங்குள்ள காவேரி விடுதியில் தங்கியிருந்தார். இவர் நேற்று பிற்பகல் 2 மணியளவில் தனது அறைக்குள் தூக்குப் போட்டு தற்கொலை செய்துள்ளார். காதல் தோல்வியால் மாணவர் கேத்தார் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் அவர் மனஉளைச்சலிலும் இருந்ததாக கூறப்படுகிறது. 4-வது செமஸ்டருக்கு மேல் தான் உயிர் வாழ மாட்டேன் என்று தனது நண்பர்களிடம் அந்த மாணவர் கூறியதாக தெரிகிறது. மாணவர் கேத்தார் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. கோட்டூர்புரம் போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.