சென்னையில் நேற்று காலை ஒரு மணி நேரத்தில் ஏழு இடங்களில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஈஞ்சம்பாக்கம் பெத்தேல்நகர், அடையாறு சாஸ்திரி நகர், அடையாறு இந்திரா நகர், கிண்டி எம்ஆர்சி உள்ளிட்ட பகுதிகளில் இந்த சம்பவங்கள் நடைபெற்றன.
இதில், நகை பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் 2 பேர் மட்டுமே எனத் தெரியவந்தது. மேலும், அவர்கள் சென்னை விமான நிலையம் நோக்கி சென்றதும் தெரிந்தது. எனவே, இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மேலும், புறப்படத் தயாராக இருந்த ஐதராபாத் மற்றும் மும்பை விமானங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. உடனடியாக போலீசார் சம்பந்தப்பட்ட விமானங்களுக்குள் நுழைந்து ஆய்வு செய்தனர்.
அதில், 2 இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தினர். இதில், கொள்ளையர்களான இருவரும் திட்டமிட்டு தொடர்ந்து இந்த நகை பறிப்பில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில், இந்த தொடர் செயின் பறிப்பு சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்ட ஜாபர் குலாம் ஹுசைன் என்ற நபர் இன்று அதிகாலை போலீஸ் நடத்திய என்கவுன்ட்டரில் உயிரிழந்தார்.
விமான நிலையத்தில் நேற்று காலை கைது செய்யப்பட்ட இவர், விசாரணையில் தரமணி ரயில் நிலையம் அருகே நகைகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். பதுக்கி வைக்கப்பட்ட நகைகளை மீட்க போலீசார் ஜாபர் குலாம் ஹுசைனை அங்கு அழைத்துச் சென்றுள்ளனர்
அப்போது, அவர் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. இதில் காவல் ஆய்வாளர் முகமது புகாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஜாபர் குலாம் ஹுசைன் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஜாபர் மீது நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதே கும்பல் தான் கடந்த பொங்கல் தினத்தில் சென்னையில் ஒரு பெண் காவலரிடமும் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்து உள்ளது. பிடிபட்ட இன்னொருவர் பெயர் சூரஜ். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரிக்கிறார்கள்.
கொள்ளையர்கள் விமான நிலையத்திற்குள் செல்வதற்குள் சட்டையை மாற்றிக்கொண்டனர். தங்களை யாரும் அடையாளம் கண்டுவிடாதபடி இப்படி செய்தனர். ஆனால் அவர்கள் அணிந்திருந்த செருப்பு அவர்களை அடையாளம் காட்டிக்கொடுத்தது.
கொள்ளை நடத்த 3 மணி நேரத்தில் விமானத்தை தடுத்து நிறுத்தி கொள்ளையர்களை தட்டித்தூக்கிய தமிழ்நாடு போலீசை சென்னை மக்கள் பாராட்டினர். அதிலும் ஒரு கொள்ளையனுக்கு போலீசார் சரியான நடவடிக்கை மேற்கொண்டனர் என பாராட்டுகள் குவிகிறது. இதுதான்டா தமிழ்நாடு போலீஸ் என மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.