மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் கண்ணன். இவர் குத்தாலம் தாலுகா திருவாவடுதுறை மெயின் ரோடு மேலக்கடை பகுதியில் வசித்து வருகிறார். கண்ணன் மனைவி ஜானகி கடந்த இரண்டாம் தேதி வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இரண்டு வாலிபர்கள் ஜானகியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவர் அணிந்திருந்த இரண்டு தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.
இது குறித்து மயிலாடுதுறை டிஎஸ்பி திருப்பதி தலைமையில் குத்தாலம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. சிசிடிவி கேமரா அடிப்படையில் 100க்கும் மேற்பட்ட கேமராக்களை ஆய்வு செய்த போலீசார்
கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபத்தை சேர்ந்த ராணுவ வீரர் வசந்த், அதே பகுதியில் நீடாமங்கலம் சாலையில் வசித்து வரும் சிவா ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 4 சவரன் தங்க சங்கிலி, இரண்டு செல்போன்கள் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் வசந்த் திரிபுரா மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருவதும் பல்வேறு வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய சிவா உடன் சேர்ந்து விடுமுறைக்கு வரும் ராணுவ வீரர் வசந்த் வழிப்பறியில் ஈடுபட்டு அதில் வரும் பணத்தைக் கொண்டு மது அருந்தி சூதாட்டத்தில் ஈடுபட்டு ஜாலியாக சுற்றித் திரிந்தது தெரியவந்தது. ராணுவ வீரர் வசந்த் மற்றும் சிவா மீது திருட்டு வழக்கு பதிவு செய்த குத்தாலம் போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.