மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே ஆஸ்டின்பட்டி நெஞ்சக மருத்துவமனை வளாகம் உள்ளது. இங்கு புதிதாக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அங்கு பீகார் மாநிலம் சுபேல் மாவட்டத்தை சேர்ந்த சுபாஷ் குமார்(18), சன்னி(21) ஆகியோர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றனர்.
நேற்று இரவு இருவரும் உணவு சமைப்பதற்காக அருகில் உள்ள கூத்தியார் குண்டு விலக்கில் உள்ள பலசரக்கு கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டு சாலையில் நடந்து சென்றனர். அப்போது, தோப்பூர் எய்ம்ஸ் அலுவலகம் அருகே வந்தபோது அவ்வழியாக டூவீலரில் வந்த மர்ம நபர்கள் 3 பேர், 2 பேைரயும் வழிமறித்து செல்போனை பறித்து சென்றுள்ளனர்.
இச்சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த இருவரும் செல்போன் பறித்துச் சென்றவர்களை துரத்திப் பிடித்து சண்டையிட்டுள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் முற்றியதால் மர்ம நபர்கள் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தொழிலாளிகள் 2பேரையும் கத்தியால் குத்திவிட்டு எஸ்கேப் ஆகியுள்ளனர். இதில் வடமாநில தொழிலாளி சுபாஷ்குமார் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து அறிந்த ஆஸ்டின்பட்டி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த சன்னியை மீட்டு சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சன்னி மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த மதுரை சரக டிஐஜி ரம்யா பாரதி, மாவட்ட எஸ்.பி சிவப்பிரசாத் ஆகியோர் விசாரணை மேற்கொண்டதுடன், தப்பியோடிய குற்றவாளிகளை விரைந்து பிடிக்க போலீஸாருக்கு உத்தரவிட்டனர். மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மதுரையில், வடமாநில தொழிலாளர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.