திமுகவின் துணை பொதுச்செயலாளராக இருப்பவர் ஐ பெரியசாமி. முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகவும் இருக்கிறார். கடந்த 2006 – 2011 ஆம் ஆண்டு வரை தமிழக முதல்வராக கருணாநிதி இருந்தபோது வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தார்.
அப்போது அவர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான வீட்டை கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு ஒதுக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான குற்றச்சாட்டில் அதிமுக ஆட்சியில் ஐ பெரியசாமிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் 2012ஆம் ஆண்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணை தொடங்கியது: இந்த வழக்கு பல ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வந்தது. இதற்கிடையே தான் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அவர் எம்பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதனை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் ஐ பெரியசாமி மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் இல்லை எனக்கூறி கடந்த மார்ச் மாதம் விடுவித்தது. இந்நிலையில் தான் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஐ பெரியசாமிக்கு எதிரான வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கை கையில் எடுத்தார். இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், விசாரணையை தொடங்கினார். இந்தவழக்கில் இறுதி விசாரணை கடந்த 12 ஆம் தேதி தொடங்கியது. அமைச்சர் ஐ பெரியசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். அதேபோல், லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் அட்வகேட் ஜெனரல் பிஎஸ் ராமன் ஆஜராகி வாதிட்டார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த பிறகு தீர்ப்புக்காக வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், ஐ பெரியசாமி மீதான சூமோட்டோ வழக்கில் நாளை மறுநாள் 26ம் தேதி காலை 10.30 மணிக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பளிக்கிறார்.
