பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங்(52) இவர் அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று இரவு பெரம்பூர் வேணுகோபால்சாமி கோயில் தெருவில் புதிதாக கட்டி வரும் வீட்டின் பணிகளை பார்ப்பதற்காக சென்றிருந்தார். தனது அண்ணன் மற்றும் நண்பர்களிடம் ஆம்ஸ்ட்ராங் பேசிக்கொண்டிருந்தார். அப்போது டூவீலரில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங்கை மீட்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுத்ததை அடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த பெரம்பூர் மற்றும் செம்பியம் போலீஸார், ஆம்ஸ்ட்ராங்கை மீட்டு கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார். ஆகஸ்ட் மாதம்18 ஆம் தேதி ரவுடி ஆற்காடு சுரேஷ் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை அருகில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். ஆற்காடு சுரேஷ் கொலையில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு தொடர்பு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆம்ஸ்ட்ராங் உதவியதாலேயே ஆற்காடு சுரேஷ் கொல்லப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் ஆம்ஸ்ட்ராங் பெயர் சேர்க்கப்படவில்லை. இதன் தொடர்ச்சியாக இரு தரப்புக்கு இடையே முன் விரோதம் நீடித்து வருகிறது. ஓராண்டு நினைவு அஞ்சலி வருவதற்குள் பழிக்கு பழியாக ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வோம் என ஆற்காடு சுரேஷ் ஆதரவாளர்கள் சபதம் செய்திருந்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்றிரவு ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே ஆற்காடு சுரேஷின் சகோதரர் பாலு, ராமு, திருமலை, செல்வராஜ், அருள் உள்ளிட்ட 8 பேர் அண்ணாநகர் துணை கமிஷனர் சீனிவாசன் முன்னிலையில் சரண் அடைந்தனர். இந்த நிலையில் ஆற்காடு சுரேஷின் பிறந்த நாளில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். ஆற்காடு சுரேஷின் பிறந்தநாள் அல்லது நினைவு நாளுக்கு ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய ஆற்காடு சுரேஷின் தம்பி ஆற்காடு பாலு திட்டம் தீட்டி வந்தார். ஆற்காடு சுரேஷின் பிறந்தநாளிலேயே நினைத்தது நல்லபடியாக முடிந்ததாக ஆற்காடு பாலு வாக்குமூலம் அளித்ததாக தகவல் தெரிவித்துள்ளனர்.
