அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே பெரியாத்துக்குறிச்சி கிராமம் மேலத் தெருவை சேர்ந்தவர் பச்சமுத்து. கூலி தொழிலாளி. இவரது மகன் சுனில் (8). இரண்டு வயது முதல் கடலூர் மாவட்டம் கொச பள்ளம் கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளான். தற்பொழுது பள்ளி விடுமுறையொட்டி தனது வீட்டிற்கு வந்தநிலையில் நேற்று ஆண்டிமடம்-விருத்தாசலம் சாலை கல்கேணி பகுதியில் உள்ள பெரியப்பா வீட்டிற்கு ரோட்டோரம் சுனில் நடந்து சென்றுள்ளான். அப்பொழுது விருத்தாச்சலத்தில் இருந்து ஆண்டிமடம் நோக்கி வந்த அரசு பேருந்து சுனில் மீது மோதியதில் சுனில் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி பரிதாபமாக உயிரிழந்தான். விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்து டிரைவர் பேருந்தை விட்டு இறங்கி தப்பி ஓடிவிட்டார். இதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் ஆத்திரத்தில் பேருந்தின் முன் கண்ணாடியை அடித்து உடைத்தனர். தகவலறிந்த ஜெயங்கொண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களை சமாதானம் செய்து போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் சுனில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகினறனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பு ஏற்பட்டு சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.