தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று கோவையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாடு பாஜக புதிய தலைவர் தேர்வுக்கான போட்டியில் நான் இல்லை. புதிய தலைவராக நான் யாரையும் கை காட்டவில்லை. என்னைப்பொறுத்தவரை கட்சி நன்றாக இருக்கவேண்டும். நான் டில்லியும் செல்லவில்லை. தமிழக அரசியலில் நீடிப்பேன். தொண்டனாக கட்சி பணியை செய்வேன். புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்ட பின்னர் நிறைய பேசுவோம். இந்த மண்ணை விட்டு எங்கும் போகமாட்டேன். என்னை அனுப்புவதிலேயே ஏன் குறியாக இருக்கிறீர்கள். எந்த வம்பு சண்டைக்கும் நான் வரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
உங்களை மாற்றுவதில் அதிமுகவின் அழுத்தம் இருக்கிறதா என கேட்டதற்கு பதில்அளிக்க அண்ணாமலை மறுத்து விட்டார்.
அண்ணாமலையின் பதவிகாலம் ஏற்கனவே முடிந்து விட்டது. ஆனாலும் அவர் சட்டமன்ற தேர்தல் வரை நீடிப்பார் என கூறப்பட்டது. இந்த நிலையில் கடந்த வாரம் டில்லி சென்று உள்துறை அமித்ஷாவை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தபோது, அண்ணாமலையை மாற்றினால் தான் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடர முடியும் என கோரிக்கை வைத்தாராம்.
இதைத்தொடர்ந்தே அண்ணாமலையை மாற்ற பாஜக மேலிடம் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. தலைவர் பதவியில் இருந்து மாற்றப்படுவதால் இன்று அண்ணாமலை பேட்டி கொடுக்கும்போது பழைய உற்சாகத்தை பார்க்க முடியவில்லை.