ஹைதராபாத்தில் இயங்கி வரும் பாரத ஸ்டேட் வங்கியின் சந்துலால் பரதாரி கிளையில் பணிபுரிந்தவர் சலபதி ராவ்; இவர் ரூ. 50 லட்சம் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக 2002-ம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. 2011-ம் ஆண்டு, தனது கணவர் 7 ஆண்டுகளாக திரும்பாததால், அவர் இறந்துவிட்டதாக தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் சலபதி ராவ் இறந்துவிட்டதாக அறிவித்தது. சிபிஐ விசாரணையில் தமிழ்நாடு-சேலத்தில் வினித் குமார் எனப் பெயரை மாற்றிக் கொண்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டதும், வினித் குமார் என்ற பெயரில் ஆதார் எண் பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவரை சிபிஐ பிடிப்பதற்குள், 2014-ம் ஆண்டு சலபதி ராவ் சேலத்திலிருந்து போபாலுக்கு தப்பிச் சென்றார் , தொடர்ந்து, உத்தரகண்ட் மாநில ருத்ராபூருக்கு தப்பிய சலபதி, அங்கி பள்ளியில் பணிபுரிந்துள்ளார். அங்கிருந்தும் தப்பிய அவர், 2016-ம் ஆண்டு அவுரங்காபாத்தில் உள்ள ஆசிரமத்தில் தங்கியுள்ளார்.
அவுரங்காபாத்தில் தனது பெயரை ஸ்வாமி விதிதாத்மானந்த் தீர்த்தா என்று மாற்றிக்கொண்டு மற்றொரு ஆதார் அட்டையைப் பெற்றுள்ளார் சலபதி ராவ். அந்த ஆசிரமம்த்தின் மேலாளரிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்துவிட்டு 2021-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் தப்பியுள்ளார். ராஜஸ்தானின் பரத்பூரில் 2024 ஜூலை மாதம் வரை தங்கியிருந்த சலபதி ராவ், பின்னர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கிராமப்புறத்தில் சாமியார் வேடத்தில் தங்கியிருந்தார். அங்கிருந்து கடல் வழியாக இலங்கை தப்ப சலபதி திட்டமிட்டிருந்த நிலையில், நரசிங்கநல்லூர் கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை சிபிஐ போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.