தஞ்சை, அதிராம்பட்டினம் கடற்பகுதியில் தம்பிக்கோட்டை, மறவக்காடு, அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை மற்றும் கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட உப்பளங்கள் உள்ளன. தற்போது அடிக்கடி பெய்து வரும் மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
உப்பு உற்பத்தியில் ஏற்பட்ட நஷ்டத்தால் தொழிலை விட்டுவிட்டு உற்பத்தியாளர்கள் வேறு தொழிலுக்கு சென்று விட்டனர். இந்த நிலையில் குறிப்பிட்ட சிலர் உப்பு உற்பத்தி தொழிலிலை வேறு வழியின்றி செய்து கொண்டிருக்கின்றனர். கடந்த சில நாட்களாக அதிராம்பட்டினம் கடற்பகுதியில் தொடர்ந்து கோடை வெயில் வெளுத்து வாங்கி வந்தது.
இதனால் உற்பத்தி சூடுபிடிக்கத் தொடங்கியது. ஆனால் கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் மழைநீர் உப்பளங்களில் தேங்கியுள்ளது. இதனால் உப்பு வாரும் நிலையில் இருந்த உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கியதால் உப்பு உற்பத்தியாளர்கள் பெரும் கவலைக்கு உள்ளாகியுள்ளனர்.
இதன் மூலம் உப்பு உற்பத்தியாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி பெய்து வரும் மழையால் தற்போது சாப்பாடு உப்பு மூட்டைகளை பாதுகாக்கும் பணியில் உப்பள தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். உப்பு உற்பத்தி பாதிப்பால் தொழிலாளர்கள் மிகவும் வேதனை அடைந்து உள்ளனர்.