அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையம் மூலம், மானாவாரி மக்காச்சோள விரிவாக்க திட்டத்தின் கீழ் 10 கிலோ மக்காச்சோளம் ,500 மில்லி நானே யூரியா, இயற்கை உரம் 12.5 கிலோ உள்ளிட்ட மானியத்துடன் கூடிய சிறப்பு தொகுப்பு விவசாயிகளுக்கு வழங்குவதற்காக 540 ரூபாய் கூடுதலாக அலுவலர்கள் பெற்று வந்ததாகவும், விவசாயிகளுக்கான பல்வேறு இடுப்பொருட்கள் வழங்கல், விதைகள் உள்ளிட்டவை வழங்க விவசாயிகளிடமிருந்து லஞ்சம் பெறுவதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிய வந்துள்ளது.இதனையடுத்து லஞ்ச
ஒழிப்பு போலீஸார் நேற்று மாலை திடீரென, அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் வேளாண் உதவி இயக்குனர் எழில் ராணியிடம் இருந்து, கணக்கில் வாராத 4 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை கைப்பற்றி வழங்கு பதிவு செய்தனர். மேலும் விசாரணை மேற்கொண்டு வரும் லஞ்ச ஒழிப்பு போலீசார், துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளனர்.