அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயத்தில்; ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவினை ஆண்டுதோறும் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை மூலமாக அரசு விழாவாக நடத்த தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
அதன்படி, அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரை விழாவினை முன்னிட்டு, வருகிற 02.08.2024 (வெள்ளிக்கிழமை) அன்று அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளுர் விடுமுறை என அறிவிக்கப்படுகிறது.
அரியலூர் மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கல்வி நிலையங்கள்,தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் இது பொருந்தும்,
இருப்பினும் இந்த உள்ளுர் விடுமுறையானது தமிழ்நாடு அரசு பள்ளித்தேர்வுத்துறை நடத்தும் பள்ளி இறுதி வகுப்பு அரசு தேர்வுகளுக்கு (மெட்ரிக், ஆங்கிலோ இண்டியன் பள்ளித்தேர்வுகள் உட்பட) பொருந்தாது. அவை ஏற்கனவே அரசால் திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்ட நாளில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்படுகிறது.
மேலும், 02.08.2024 (வெள்ளிக்கிழமை) அன்று உள்ளுர் விடுமுறை அனுசரிப்பதால், அதனை ஈடுசெய்யும் பொருட்டு, 17.08.2024 (சனிக்கிழமை) அன்று முழுவேலை நாள் எனவும் ஆணையிடப்படுகிறது.
விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், அறிவிக்கப்பட்டுள்ள உள்ளுர் விடுமுறை நாளில் அனைத்து சார்நிலை கருவூலங்களும், மாவட்ட கருவூலமும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டும், குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு செயல்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.