Skip to content
Home » அரியலூர் ஸ்ரீ ஆலந்துரையார் கோவிலில் கும்பாபிஷேகம்….பக்தர்கள் தரிசனம்..

அரியலூர் ஸ்ரீ ஆலந்துரையார் கோவிலில் கும்பாபிஷேகம்….பக்தர்கள் தரிசனம்..

அரியலூர் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஆலந்துரையார் திருக்கோவில் 600 ஆண்டுகள் பழமையான வரலாற்று புகழ் பெற்ற திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலின் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவையொட்டி முன்னதாக கடந்த 25-ஆம் தேதி கணபதி ஹோமம், ஸ்ரீ லட்சுமி பூஜை ஹோமம், நவக்கிரக ஹோமங்கள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. 28ம் தேதி கோ பூஜையும் இதனைத் தொடர்ந்து 30 ஆம் தேதி செட்டிய ஏரி விநாயகர் ஆலயத்தில் இருந்து கஜபூஜையுடன் தொடங்கி தீர்த்த சங்கரஹனம் நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு முதல் காலை யாக பூஜை தொடங்கப்பட்டது.
நேற்றுடன் அனைத்து விக்னேஷ்வர பூஜை, கடஸ்தாபனம் முதல் கால யாக பூஜை, இரண்டாம் காலம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜை நடத்தப்பட்டன. தொடர்ந்து இன்று காலை நான்காம் கால யாக பூஜைகள் நடத்தப்பட்டு நாடி சந்தானம், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து யாக சாலையில் இருந்து கடம் புறப்பாடு நடத்தப்பட்டு யாகசாலையில் இருந்து புனித நீர் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு விநாயகருக்கு முதலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து காலை 8:30 மணிக்கு அருள்மிகு ஸ்ரீ ஆலந்துறையார் சுவாமி மற்றும் அம்பாள் விமானம் உள்ளிட்ட அனைத்து விமானங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டது.

கோவில் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்ட மகா கும்பாபிஷேக தீர்த்தம் பொதுமக்களுக்கும் தெளிக்கப்பட்டது. அரியலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக திரண்டு வந்து மகா கும்பாபிஷேகத்தை கண்டு தரிசித்தனர். இதன் பின்னர் மூலவர் ஸ்ரீ அருள்மிகு ஆலந்துறையர் மற்றும் அம்பாள் அருந்தவ நாயகி மற்றும் 68 நாயன்மார்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட ஆலந்துறையார் மற்றும் அருந்தவநாயகி ஆகியோருக்கு மகா தீபாரதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்து சமய அறநிலைத்துறை நிர்வாக அறங்காவலர்களும், ஓம் நமச்சிவாய திருப்பணிக்குழு மற்றும் ஸ்ரீ நரசிம்மா டிரஸ்ட் நிர்வாகிகள் மற்றும் ஊர் பெரியவர்கள், இளைஞர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் காவல்துறை சார்பில் அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பொறுப்பு சியாமளா தேவி தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு அளித்தனர். இதை தொடர்ந்து 48 நாள் மண்டல பூஜை நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!