டில்லியில் அரசு கொண்டு வந்த புதிய மதுபானக் கொள்கை விவகாரத்தில் ஊழல் நடந்தாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்த மார்ச் 21ம் தேதி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தனர். ‘சிறையில் இருந்தாலும் அவர் முதல்வராக தொடர்வார்’ என ஆம் ஆத்மி கட்சி அறிவித்தது. இந்நிலையில், டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கெஜ்ரிவாலை, ஏப்ரல் 15 வரையில் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து, கெஜ்ரிவாலுக்கு திகார் சிறையில் தனி அறை ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது. கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டாலும், சிறைக் கட்டுப்பாட்டை மீறி முதல்வராக கெஜ்ரிவாலால் செயல்படுமாடுமா? என்பது தெரியவில்லை. முன்னதாக, சிறையில் தனக்கு வேண்டிய வசதிகள் குறித்து கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அதில், பகவத் கீதை, ராமாயணம் மற்றும் பத்திரிகையாளர் நீரஜா சௌத்ரி எழுதிய How Prime minister decide ஆகிய 3 புத்தகங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும். மதம் சார்ந்து அணிந்திருக்கும் பொருள்களை வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும். சிறையில் மருந்துகளை தர வேண்டும், உடல்நலனுக்கு ஏற்ற சிறப்பு உணவுகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதனை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. தற்போது திகார் சிறையில் கெஜ்ரிவாலுக்கு இரண்டாம் எண் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அவரது அறைக்கு வெளியே கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
