அதிமுக, பாஜக இடையே கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. டில்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி, கூட்டணிக்கான முதல் நிபந்தனையாக அண்ணாமலையை மாநிலத்தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். நயினார் நாகேந்திரன், அல்லது மத்திய அமைச்சர் எல். முருகன் ஆகியோரில் ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தாராம்.
அதிமுகவின் இந்த கோரிக்கை குறித்து பாஜக மேலிடம் ஆலோசனை நடத்தி வருகிறது. இது குறித்து அண்ணாமலையை டில்லிக்கு அழைத்து மேலிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. ஏற்கனவே அண்ணாமலைக்கான தலைவர் பதவி காலம் முடிந்து விட்டது.
நீக்கம் என்று சொல்லாமல், அவரது பதவி காலம் முடிந்து விட்டது. புதிய தலைவர் தேர்வு செய்யப்படுகிறார் என விரைவில் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. அண்ணாமலை தலைவர் பதவியில் இருந்து விடுபட்டதும், அவரை மத்திய அமைச்சராக்கவும் பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதற்காக ஜூலை மாதம் தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்படும் எம்.பிக்களில் ஒருவராக அண்ணாமலையை தேர்வு செய்யவும் பாஜக காய் நகர்த்தி வருகிறது. அதிமுக சார்பில் 2 பேர் எம்.பிக்களாக தேர்வு செய்யப்படலாம். அதில் ஒரு சீட் அண்ணாமலைக்கு கொடுக்க வேண்டும் என்றும் பாஜக கூறி வருகிறது.
எனவே அண்ணாமலை விரைவில் மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு மத்திய அமைச்சர் ஆகலாம் என்று பாஜக வட்டாரத்தில் பரபரப்புடன் பேசப்படுகிறது. வரும் 10ம் தேதிக்குள் அண்ணாமலை மாற்றம் அறிவிப்பு வௌியாகும்.