மும்பையின் கடற்கரை சாலை சுரங்கப்பாதையில் நடிகர் அமிதாப் பச்சன் முதல் முறையாக பயணம் செய்திருக்கிறார். அந்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, இந்தப் பயணம் மிக அற்புதமாக இருந்ததாக தெரிவித்துள்ளார் அமிதாப்.
சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கும் ’பிக் பி’ அமிதாப் பச்சன் மும்பையில் சமீபத்தில் திறக்கப்பட்ட கடற்கரை சாலை சுரங்கப்பாதை வழியாக முதல் முறையாக பயணப்பட்டுள்ளார். இது தொடர்பான வீடியோவை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு ‘மார்வெலஸ்’ என மும்பையில் சுரங்கப்பாதையில் தனது முதல் பயணம் குறித்தான ஆச்சரியத்தைப் பகிர்ந்துள்ளார். மரைன் டிரைவ் மற்றும் பாந்த்ரா வொர்லி கடல் இணைப்பை இணைக்கும் 10.58 கிமீ தூரத்தை உள்ளடக்கிய இந்த சுரங்கப்பாதை, பயண நேரத்தை 40-50 நிமிடங்களில் இருந்து 10 நிமிடங்களாக குறைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்தின் முதல் கட்டத்தை மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மார்ச் 11 அன்று தொடங்கி வைத்தார். இது வாகன ஓட்டிகளை வொர்லியிலிருந்து மரைன் டிரைவிற்கு வெறும் 10 நிமிடங்களில் பயணிக்க வைக்கிறது. கடந்த 2018 அக்டோபரில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்திற்கு ரூ.12,721 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் இரண்டாம் கட்டம் இந்த ஆண்டு மே 15-ம் தேதிக்குள் போக்குவரத்துக்கு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் அமிதாப் பச்சன் சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என செய்தி வந்தது. ஆனால், அது உண்மையில் இல்லை என்று பின்னர் மறுத்தார். அமிதாப் சொன்னது உண்மைதான் என்பது அவரது சுரங்கப்பாதை பயணத்தின் மூலம் மீண்டும் உறுதியாகி இருக்கிறது. அமிதாப் இப்போது, ‘கல்கி 2898 ஏடி’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் இல்லாது, ரஜினிகாந்தின் ‘வேட்டையன்’ படத்திலும் சிறப்புத் தோற்றத்தில் அமிதாப் நடித்துள்ளார்.