Skip to content

பயிர் காப்பீடு செய்ய வரும் 31ம் தேதி கடைசி நாள்…..அரியலூர் கலெக்டர்

வேளாண் பயிர்களில் பூச்சிநோய் தாக்குதல் மற்றும் இயற்கை இடர்பாடுகளால் எதிர்பாராத இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கவும், நிலையான வருமானம் கிடைக்கச் செய்து, அவர்களை விவசாயத்தில் நிலைப்பெறச் செய்யவும்,  பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் மத்திய அரசின் புதிய வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பு 2024-25ம் ஆண்டில் காரீப், ராபி மற்றும் சிறப்பு பருவங்களுக்கு அரியலூர் மாவட்டத்தில் ‘அக்ரிகல்சர் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனி இந்தியா லிமிடெட்” என்ற முகமையின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் காரீப் பருவத்தில், நெல் I பயிருக்கு ஆண்டிமடம், குவாகம், குண்டவெளி, உடையார்பாளையம், தா.பழூர், சுத்தமல்லி, அரியலூர், ஏலாக்குறிச்சி, மாத்தூர், செந்துறை, நாகமங்கலம், பொன்பரப்பி, ஜெயங்கொண்டம் மற்றும் திருமானூர் ஆகிய 14 பிர்காக்களிலும், மக்காச்சோளம் I பயிருக்கு ஆண்டிமடம், குவாகம், குண்டவெளி, உடையார்பாளையம், தா.பழூர் மற்றும் சுத்தமல்லி ஆகிய 6 பிர்காக்களிலும், உளுந்து பயிருக்கு ஆண்டிமடம், குவாகம், நாகமங்கலம், குண்டவெளி, உடையார்பாளையம், மாத்தூர், செந்துறை, பொன்பரப்பி, சுத்தமல்லி, தா.பழூர் மற்றும் ஏலாக்குறிச்சி ஆகிய 11 பிர்காக்களிலும், நிலக்கடலை பயிருக்கு ஆண்டிமடம், குவாகம், அரியலூர், நாகமங்கலம், ஜெயங்கொண்டம், குண்டவெளி, உடையார்பாளையம், பொன்பரப்பி, மாத்தூர், செந்துறை, ஏலாக்குறிச்சி, கீழப்பழூர், சுத்தமல்லி மற்றும் தா.பழூர் ஆகிய 14 பிர்காக்களிலும் பயிர் காப்பீடு செய்துகொள்ளவும் அரசால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் சோளம் பயிருக்கு அரியலூர், ஏலாக்குறிச்சி, கீழப்பழூர், மாத்தூர், செந்துறை, நாகமங்கலம் மற்றும் சுத்தமல்லி ஆகிய 7 பிர்காக்களிலும், கம்பு பயிருக்கு ஆண்டிமடம், குண்டவெளி, மாத்தூர் மற்றும் செந்துறை ஆகிய 4 பிர்காக்களிலும் பயிர் காப்பீடு செய்துகொள்ளவும் அரசால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நடப்பு 2024-25ம் ஆண்டு காரீப் பருவத்தில் நெல் I, கம்பு, உளுந்து மற்றும் நிலக்கடலை பயிர்களுக்கு ஜீலை 31ஆம் தேதி வரையிலும், சோளம் மற்றும் மக்காச்சோளம் I பயிர்களுக்கு செப்டம்பர் 16-ஆம் தேதி வரையிலும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். விவசாயிகள் 1 ஏக்கர் நெல் I பயிருக்கு ரூ.764-ம், 1 ஏக்கர் சோளம் பயிருக்கு ரூ.284-ம், 1 ஏக்கர் கம்பு பயிருக்கு ரூ.258-ம் மற்றும் 1 ஏக்கர் மக்காச்சோளம் I பயிருக்கு ரூ.460-ம், 1 ஏக்கர் உளுந்து பயிருக்கு ரூ.308-ம், 1 ஏக்கர் நிலக்கடலை பயிருக்கு ரூ.506-ம் பிரிமீயத் தொகையாக செலுத்தி தங்களது பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம்.

இதற்காக விவசாயிகள் பொது சேவை மையத்தில் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பம், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து பிரிமியத் தொகையை செலுத்தியபின் அதற்கான ரசீதை பெற்றுக்கொள்ளலாம். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க சேவை மையங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் பயிர் காப்பீடு செய்துகொள்ளலாம். தற்போது காரீப் பருவ பயிர் சாகுபடி முழு வீச்சில் நடைபெற்று வரும் வேளையில் விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே காப்பீடு செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் இது தொடர்பான விபரங்களுக்கு, விவசாயிகள் அருகிலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயனடையுமாறு  அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா கேட்டுக்கொண்டுள்ளார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!