விபத்து தொடர்பான வழக்கு ஒன்றை நடத்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக, எழும்பூர் நீதிமன்றத்தில் வக்கீல்கள் இடையே அடிதடி சண்டை ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் காயமடைந்த 4 பேர் ஓமந்துாரார் மற்றும் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது… சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் தலைமை பெருநகர நீதிமன்றம், விபத்து தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் என, 12க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் உள்ளன. இந்த நிலையில் கொடுங்கையூரைச் சேர்ந்த சகோதரர்களான செந்தில்நாதன், சக்திவேல் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக பணிபுரிகின்றனர். விபத்து தொடர்பான வழக்கில், எழும்பூர் நீதிமன்றத்திலும் ஆஜராகி வந்தனர். அயனாவரத்தில் நடந்த விபத்து தொடர்பான வழக்கு ஒன்றை நடத்தி வந்தனர். இந்த வழக்கை, எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் விஜயகுமார், விமல், தினேஷ் ஆகியோர் தட்டிப் பறித்துள்ளனர். செந்தில்நாதன், சக்திவேல் ஆகியோரிடம் வழக்கு நடத்த அனுமதி அளித்த நபரும், பின்வாங்கி உள்ளார். அவரிடம் கேட்டதற்கு, ‘எனக்கு எதுவும் தெரியாது; நீங்கள் விஜயகுமாரிடம் பேசிக்கொள்ளுங்கள்’ என, கூறிவிட்டு, மொபைல் போனை, ‘சுவிட்ச் ஆப்’ செய்து விட்டார். அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில்நாதன், சக்திவேல், வெளியாட்கள் இருவர், எழும்பூர் நீதிமன்றத்திற்கு வந்தனர். நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளே நுழை வாயில் அருகே, விஜயகுமார் மற்றும் செந்தில்நாதன் தலைமையில் இரு தரப்பு வழக்கறிஞர்களும் அமர்ந்து, இப்பிரச்னை தொடர்பாக பேசிக்கொண்டு இருந்தனர். அதில் வாக்குவாதம் ஏற்பட்டு, மோதல் வெடித்து அடிதடியில் இறங்கினர். நாற்காலிகளை துாக்கி வீசி, தாக்குதல் நடத்தினர். இதில் நான்கு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக எதுவும் புகார் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
