கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலை ஊராட்சி ஒன்றியத்தின் ஒன்றிய குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த லதா ரங்கசாமி இருந்து வந்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தோகைமலை ஒன்றியத்தில் அதிமுக சார்பில் 10 நபர்களும் திமுக சார்பில் நான்கு நபர்களும் பாஜக சார்பில் ஒரு நபரும் என 15 பேர் ஒன்றிய கவுன்சிலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2021 ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் அதிமுகவை சேர்ந்த துணைத் தலைவர் உட்பட 8 ஒன்றிய கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்தனர்.
திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர் ஒருவர் அதிமுகவிற்கு அணி மாறியதால் தோகைமலை ஒன்றியத்தில் திமுகவின் பலம் 11 ஆக இருந்தது.
இந்நிலையில் ஒன்றிய குழு தலைவரின் கணவரும் அதிமுக தோகைமலை மேற்கு ஒன்றிய செயலாளருமான ரெங்கசாமி ஒன்றிய நிர்வாகத்தில் தலையீடுகள் அதிகளவில் உள்ளதாகவும், டெண்டர் மற்றும் ஒன்றிய பொது நிதி பணிகளில் ஊழல் முறைகேடுகள் செய்ததாக கூறி அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து பதவி நீக்கம் செய்ய கோரி கடந்த பிப்ரவரி மாதம் 3ம் தேதி குளித்தலை ஆர்டிஓ விடம் தோகைமலை திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் புகார் மனு அளித்துள்ளனர். அதன்பேரில் இன்று தோகைமலை ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து ஆர்டிஓ புஷ்பா தேவி தலைமையில் விசாரணை மேற்கொண்டு வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதில துணை தலைவர் உட்பட்ட 12 ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டு நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனையடுத்து தோகைமலை ஒன்றிய தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 11 திமுக கவுன்சிலர்கள், ஒரு பாஜக கவுன்சிலர் உட்பட 12 பேர் ஒன்றிய குழு தலைவருக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.