HPZ டோக்கன் எனப்படும் செயலி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் நடிகை தமன்னா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதற்காக தமன்னாவுக்கு அந்த செயலி நிறுவனம் பெரும் தொகை ஒன்றை செலுத்தியுள்ளது. HPZ டோக்கன் செயலி மூலம் பல்வேறு முதலீட்டார்களை ஏமாற்றியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை HPZ டோக்கன் செயலி நிறுவனம் மீது விசாரணை மேற்கொண்டுள்ளது.
இந்த வழக்கில் இதுவரை 76 சீன நிறுவனங்கள் உட்பட மொத்தம் 299 நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களிடம் பண மோசடி செய்வதற்காகவே இந்த செயலி பயன்படுத்தப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த செயலி நிர்வாகம் நடத்திய விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் நடிகை தமன்னா சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். இதில் கலந்து கொண்டதற்காக அவருக்கு ஒரு பெரிய தொகையும் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து விசாரிக்க அவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், நேற்று (அக்.17) அசாம் மாநிலம் குவகாத்தியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமன்னா தனது பெற்றொருடன் ஆஜரானார்.
அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்கள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு அழைப்போம் என்று கூறி அவரை அனுப்பி விட்டனர். இந்த விவகாரத்தில் தமன்னா மீது வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.