புதுச்சேரியில் விடா முயற்சி வெளியான திரையரங்குகளில் ரசிகர்கள் அஜித்குமார் கட்அவுட் வைத்து பீர் மற்றும் பால் அபிஷேகம் செய்தனர். செண்டமேளம், பேண்டுவாத்தியம், நாதஸ்வரம் என இசையுடன் ஆட்டம், பாட்டம் என கொண்டாடினர்.
மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்த விடாமுயற்சி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. 2 ஆண்டுக்கு பிறகு அஜித்குமார் படம் வெளியானதை அவரின் ரசிகர்கள் தமிழகம், புதுவையில் கொண்டாடினர். புதுவையில் நகர், கிராமப்புறங்களில் 15 தியேட்டர்களில் விடா முயற்சி படம் திரையிடப்பட்டது. கடலூர் சாலையில் உள்ள வணிக வளாக திரையரங்குகளில் ஒரு நாளைக்கு 10க்கும் மேற்பட்ட காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது.
இன்று காலை 10.30 மணிக்கு ராஜா தியேட்டரில் திரைப்படம் திரையிடப்பட்டது. இங்கு ரசிகர்கள் அஜித்குமார் கட்அவுட் வைத்து பீர் மற்றும் பால் அபிஷேகம் செய்தனர். செண்டமேளம், பேண்டுவாத்தியம், நாதஸ்வரம் என இசையுடன் ஆட்டம், பாட்டம் என கொண்டாடினர். இதேபோல பாலாஜி, முருகா, ரத்னா உள்ளிட்ட பல திரையரங்குகளிலும் ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி திரைப்படத்தை வரவேற்றனர். தியேட்டரில் அஜித்குமார் அறிமுகமான காட்சியில் கலர் பேப்பர்களை வீசி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதேபோல் சென்னை அம்பத்தூரில் உள்ள ராக்கி திரையரங்கிலும் அஜித் கட்டவுட்க்கு பீர் அபிஷேகம் செய்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.