நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்தவர் அரவிந்த். இவர் பரமத்தி வேலூரில் இருந்து கேஸ் சிலிண்டர்களை ஏற்றுக் கொண்டு தஞ்சாவூர் நோக்கி சரக்கு வாகனத்தில் கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தார்.
இன்று அதிகாலை குளித்தலை அருகே தேவதானம் என்ற இடத்தில் வந்த போது எதிரே திருச்சியில் ஜல்லி லோடு இறக்கி விட்டு கரூர் நோக்கி வந்த டிப்பர் லாரியும், கேஸ் சிலிண்டர் ஏற்றிச்சென்ற வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதில் கேஸ் சிலிண்டர் வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் அரவிந்த் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி நொறுங்கியதால் அரவிந்த உடலை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த டிப்பர் லாரியின் டிரைவர் தங்கவேல் மற்றும் லாரியில் உடன் வந்த உரிமையாளர் தமிழழகன் ஆகிய இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தினால் திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.