கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் கடந்த 2020ம் ஆண்டு சிறுமியை கடத்தி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தாந்தோன்றிமலையை சார்ந்த நிசாந்த் (வயது 24), அரவிந்த் (வயது 24), திருக்காம்புலியூரை சார்ந்த வசந்த் என்கின்ற வசந்த குமார் (வயது 24), பெருமாள்பட்டி காலணியை சார்ந்த கலைவாணன் (வயது 29), மருதம்பட்டி காலணியை சார்ந்த கோகுல்நாத் (வயது 24), வையாபுரி நகரை சார்ந்த பார்த்திபன் ஆகியோரை கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பான வழக்கு கரூர் கூடுதல் அமர்வு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில் நிசாந்த் மற்றும் அரவிந்த்க்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தலா 1000 ரூபாய் அபராதமும், வசந்த் என்கின்ற வசந்தகுமார், கலைவாணன், கோகுல்நாத் மற்றும் பார்த்திபன் ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 1000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
அதே போல், வேலாயுதம்பாளையத்தில் 2021ம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் வேலாயுதம்பாளையத்தை சார்ந்த அப்துல் சமத் (வயது 59) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 7 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என கரூர் மாவட்ட கூடுதல் அமர்வு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.