மீன்களின் இனபெருக்க காலத்தை முன்னிட்டு ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14 ம் தேதி வரை 61 நாட்களுக்கு தமிழக விசைப்படகு மீனவர்கள் ஆழ் கடலுக்குச் சென்று மீன்பிடிக்க கூடாது என அரசு தடைவிதித்து வருகிறது.இதனை ஏற்று ஒவ்வொரு ஆண்டும் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடி தடை காலத்தை கடைபிடிக்கின்றனர். இந்த ஆண்டு மீன்பிடித் தடைக்காலம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதால், நாகையில் மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகள் இன்று கரைக்கு திரும்பின. இதனால் நாகை மாவட்டத்தில் உள்ள கீச்சாங்குப்பம் அக்கரைப்பேட்டை, கல்லார், நம்பியார்நகர், நாகூர், சாமந்தான்பேட்டை, செருதூர் கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள், துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நீண்ட நாட்கள் மீன்பிடி தொழிலாளர்கள் கரையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால், அங்கு படகுகளில் உள்ள மீன்பிடி வலைகளை சரி பார்த்து, தளவாட பொருட்களை மீனவர்கள் பத்திரப்படுத்தி வருகின்றனர்.
இதனிடையே ஆண்டுதோறும் அரசு வழங்கி வந்த மீன்பிடி தடைக்கால நிவாரணம் 5, ஆயிரம் ரூபாயை இவ்வாண்டு 8, ஆயிரம் ரூபாயாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்த தொகையை அக்காலங்களில் மீனவ குடும்பங்களுக்கு பயன்படும் வகையில் உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள நாகை மீனவர்கள், படகு பழுது நீக்க வங்கி கடனாக 5 லட்சம் ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.