தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நெல் அரவை செய்யப்பட்டு, பொது வினியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும். அதன்படி நேற்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 1250 டன் அரிசி, 4000 டன் நெல் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் தஞ்சாவூரில் இருந்து கோவைக்கு 1250 டன் அரிசி பொது விநியோக திட்டத்திற்காக 21 வேகன்களிலும், கும்பகோணத்தில் இருந்து ஈரோட்டுக்கு 2000 டன் நெல் அரவைக்காக 42 வேகன்களிலும், பட்டுக்கோட்டையில் இருந்து திருவண்ணாமலைக்கு 2000 டன் நெல் அரவைக்காக 42 வேகன்களிலும் சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
